நளினி பொதுமன்னிப்பிற்குத் தகுதியானவர் அல்ல என்றும், எனவே அவரை விடுதலை செய்யவேண்டாம் என்று 2006ல் தமிழக அரசு எடுத்த முடிவு சரியானதே என்றும் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
2006ல் திமுக நிறுவனர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவையொட்டி தமிழக அரசு பத்தாண்டுகள் சிறையில் கழித்த ஆயுள்தண்டனைக் கைதிகளை விடுதலை செய்தது.
ஆனால் மத்திய புலனாய்வுத் துறையான சி.பி.ஐ. விசாரித்த வழக்குகளில் தண்டனை பெற்றோர் அவ்வாறு விடுதலை செய்யப்படமாட்டார்கள் எனவும் அபோது அரசு அறிவித்தது.
சி.பி.ஐ. விசாரணையைக் காரணம் காட்டி விடுதலை மறுப்பது அரசியல் அமைப்புச் சட்டத்தால் உறுதி செய்யப்பட்ட அடிப்படை உரிமைகளை மீறுவதாகும் என்று கூறி 2006 ஆண்டு ஆணையினை எதிர்த்து நளினி உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
2008 செப்டம்பரில் அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அவ்வுத்திரவை எதிர்த்து நளினி மேல் முறையீடு செய்தார்.
அவ்வழக்கை நீதிபதி இலிபி தர்மாராவ் மற்றும் கே.கே. சசிதரன் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் விசாரித்து அளித்த தீர்ப்பில், சி.பி.ஐ. விசாரணையைக் காரணம் காட்டி நளினிக்கு விடுதலை மறுக்கப்பட்டது சரியே என்று கூறப்பட்டுள்ளது.
தீர்ப்பு தங்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவும் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை செய்துகொண்டிருப்பதாகவும் நளினிக்காக வாதாடிய வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக