இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

செய்தியறிக்கை

JKR  ஞாயிறு, 15 நவம்பர், 2009

செய்தியறிக்கை
எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி
எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி

ஆங் சான் சூச்சியை விடுதலை செய்ய அமெரிக்க அதிபர் கோரிக்கை

பர்மாவின் ஜனநாயக ஆதரவு எதிர்கட்சித் தலைவி ஆங் சான் சூச்சி விடுதலை செய்யப்பட வேண்டும் என அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா, பர்மியப் பிரதமர் ஜெனரல் தெய்ன் செய்னிடம் நேரடிக் கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

'அபெக்' எனப்படும் ஆசிய பசிபிக் வட்டகை நாடுகளுடைய பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பின் மாநாடு சிங்கப்பூரில் நடந்து வரும் இத்தருணத்தில், ஆசியான் அமைப்பில் உள்ள பத்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுடைய தலைவர்களுடன் முன்பில்லாத வகையில் நடந்த ஒரு சந்திப்பில் கலந்துகொண்டபோது அதிபர் ஒபாமா தனது இந்தக் கோரிக்கையை வழங்கினார்.

பர்மாவில் அடுத்த ஆண்டில் நடக்கத் திட்டமிடப்பட்டுள்ள தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கியதாகவும் நடக்க வேண்டும் என இந்தச் சந்திப்பின் முடிவில் வெளியிடப்பட்ட கூட்டுத் தீர்மானத்தில் கோரப்பட்டிருந்தது.

ஆனால் சூச்சி அம்மையாரின் விடுதலை தொடர்பில் இந்த தீர்மானத்தில் எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை.


கோபன்ஹேகனில் பருவநிலை ஒப்பந்தம் ஏற்படுவது சாத்தியமல்ல - சர்வதேச தலைவர்கள்

புவி வெப்பமடைய தொழிற்சாலைகளும் காரணம்
புவி வெப்பமடைய தொழிற்சாலைகளும் காரணம்

கோபன்ஹேகனில் அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா.மன்ற மாநாட்டில் உலக பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பில் சட்டமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதென்பது சாத்தியமில்லை என்பதில் தற்போது சிங்கப்பூரில் நடந்துவரும் ஆசிய பசிபிக் வட்டகை நாடுகள் பொருளாதார ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்துகொண்டுள்ள சர்வதேச தலைவர்கள் உடன்பட்டுள்ளனர்.

கோபன்ஹேகன் மாநாடு என்பது சட்டபூர்வமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஓர் ஒப்பந்தத்தை எட்டுவதற்கான ஆரம்பம்தானே ஒழிய, நிறைவேற்றம் அல்ல என்று சர்வதேசத் தலைவர்கள் தற்போது கருதுவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வெப்ப வாயு வெளியேற்றத்தில் முன்பு திட்டமிடப்பட்டிருந்த அளவுகளில் குறைப்புகள் செய்வதற்கு நாடுகள் உறுதி ஏற்கும் விஷயம் அபெக் மாநாட்டின் இறுதித் தீர்மானத்தில் இடம்பெறவில்லை.

சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் நிலைக்கக்கூடிய பொருளாதார முன்னேற்றத்தை தருவதற்கான வழிவகைகள் குறித்து இந்தத் தீர்மானத்தில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.


ஆப்கான் அதிபருக்கு அமெரிக்க அரசுத்துறை எச்சரிக்கை

அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹில்லாரி கிளிண்டன்
அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹில்லாரி கிளிண்டன்

ஆப்கானிய அதிபர் ஹமீத் கர்சாயும் அவருடைய அமைச்சர்கள் அனைவரும் ஆப்கானிய நிர்வாகத்துக்கு முழுப் பொறுப்பேற்பவர்களாக ஆகாத வரையில், ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா கூடுதலான சிவிலியன் உதவிகளை வழங்காது என்று அமெரிக்க அரசுத்துறைச் செயலர் ஹில்லாரி கிளிண்டன் எச்சரித்துள்ளார்.

அமெரிக்க தொலைகாட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சி ஒன்றில் சற்றுக் கடுமையாக கருத்து வெளியிட்ட கிளிண்டன் அம்மையார், ஆப்கானிய அரசாங்கம் - கீழ் மட்டத்திலிருந்து மேல்மட்டம் வரையில் - மக்களின் தேவைகளுக்கு கூடுதலாக முகங்கொடுக்கிறது, மக்கள் எதிர்பார்க்கும் சேவைகளை நிறைவேற்றுகிறது - பூர்த்தி செய்கிறது என்பதற்கு நிஜமான ஆதாரங்கள் கிடைக்க வேண்டும் என்று கிளிண்டன் கூறினார்.

ஆப்கானிஸ்தானில் நடக்கின்ற யுத்தத்தை வெல்வது சாத்தியமே என்று அமெரிக்க மக்களுக்கு புரியவைக்க தமது அரசாங்கத்தால் இயலும் என்று தான் நம்புவதாக அவர் கூறினார்.


மலேஷிய தமிழ் பத்திரிக்கைக்கு அச்சுறுத்தல்

மலேசிய மோதல்( கோப்புப் படம்)
மலேசிய மோதல்( கோப்புப் படம்)

மலேஷியாவில் இந்திய பூர்வீகம் கொண்டவர்கள் ஐந்து பேர் கடந்த வாரம் பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் குறித்து அந்நாட்டின் தமிழ் செய்தித்தாளான தமிழ் நேசன் பத்திரிகை இனியும் செய்தி வெளியிட்டால் அப்பத்திரிகை பிரசுர உரிமத்தை இழக்க நேரிடும் என்ற அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாக அப்பத்திரிகையின் தலைமை நிறைவேற்று அதிகாரி கூறியுள்ளார்.

தமிழ் நேசன் வெளியிடும் இச்சம்பவம் பற்றிய செய்திகளால் நாட்டில் இனரீதியான பதற்றம் அதிகரிப்பதாக தன்னிடம் கூறப்பட்டிருந்ததாக பத்திரிகையின் தலைமை அதிகாரி வேல் பாரி தெரிவித்துள்ளார்.

ஆனால் மலேஷிய ஊடகங்கள் பலவற்றைப் போலத்தான் தாங்கள் அச்சம்பவம் பற்றி செய்தி வழங்குவதாகக் கூறும் வேல்பாரி தமது செய்தியில் தவறில்லை என்றும் கூறினார்.

பொலிஸ்துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டவர்கள் குற்ற சந்தேக நபர்கள் என்றும் அவர்கள் பொலிசார் மீது முதல் சுட்டதால்தான் பொலிசார் திருப்பிச் சுடவேண்டி வந்தது என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர்.

செய்தியரங்கம்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ்

இலங்கை தேர்தல் குறித்து பொருத்த நேரத்தில் அறிவிக்கப்படும் - இலங்கை ஜனாதிபதி

இலங்கையில் அடுத்து நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் பொருத்தமான தருணத்தில் அறிவிக்கப்படும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ் தெரிவித்துள்ளார்.

நாட்டு மக்கள் கோரும் தேர்தலை நடத்த தாம் தயாராகவுள்ளதாகவும் அவர் குறிப்பி்ட்டார்.

கொழும்பு கெத்தாராம விளையாட்டரங்கில் ஞாயிறு மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 19வது தேசிய மாநாட்டில் உரையாற்றிய போதே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இவ்வாறு தெரிவித்தார்.

சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாத தமது அரசாங்கம் இராணுவத்தையும் நாட்டையும் பிளவு படுத்த மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு ஒரு போதும் இடமளிக்காது எனவும் அவர் இங்கு குறிப்பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் கட்சியின் சிரேஷ்ட தலைவர்கள், உறுப்பினர்கள், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களும் சுமார் 35 நாடுகளைச் சேர்ந்த இராஜதந்திரிகளும் கலந்து கொண்டனர்.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து விட்டதாக அறிவிக்கப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்டுள்ள ஆளும் பிரதான கட்சியின் இந்த மாநாட்டில் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில் தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகக்கூடும் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

மகிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்று நான்கு வருடகாலம் இந்த வாரத்துடன் பூர்த்தியடையும் நிலையில் மீதமுள்ள இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எந்த வேளையிலும் ஜனாதிபதி தேர்தலும் எதிர்வரும் ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் பாராளுமன்ற தேர்தலும் நடத்தப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இலங்கை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அரச நிலங்கள் அபகரிக்கப்படுவதாக புகார்

மட்டக்களப்பு வரைப்படம்
மட்டக்களப்பு வரைப்படம்

இலங்கை மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட எல்லையில் அரச நிலங்களை அத்து மீறி அபகரிப்பது தொடர்பாக வக்கியல்ல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும் பொலிசாரால் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டதாக இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் குற்றம் சுமத்துகின்றார்

இது தொடர்பாக அப்பிரதேசத்திற்கு பொறுப்பான சிவில் அதிகாரியான பட்டிப்பளை பிரதேச செயலாளர் மட்டக்களப்பு அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளார் என்றும் அவர் தெரிவிக்கின்றார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழ் பிரதேசங்களில் அரச காணிகள் ஆக்கிரமிப்பு செய்யப்படுவதாக தான் ஜனாதிபதியிடம் புகார் செய்ததையடுத்து இது தொடர்பான அறிக்கையை ஜனாதிபதி செயலகம் அரசாங்க அதிபர்களிடம் கோரியுள்ளது என்றும், மேற்படி விடயம் தொடர்பாக மாவட்ட அரசாங்க அதிபர் சம்பந்தப்பட்ட பகுதி பிரதேச செயலாளர்களிடம் விபரங்களை சமர்ப்பிக்குமாறு கோரியுள்ளதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்தார்.

இது தொடர்பாக பிரதேச செயலாளர் அரசாங்க அதிபருக்கு அனுப்பி வைத்துள்ள அறிக்கையின் பிரதி தனக்கு கிடைத்துள்ளதாகவும் கூறுகின்றார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


மீள்குடியேற்றபட்ட மக்களுக்கு தேவையான வசதிகளை அரசாங்கம் செய்து தரவில்லை - தமிழ் தேசிய கூட்டமைப்பின் இரா.சம்பந்தர்

இடம்பெயர்ந்த மக்கள்
இடம்பெயர்ந்த மக்கள்

இலங்கையின் வடக்கே போருக்கு பிறகு மீள்குடியேற்றம் செய்யப்படும் மக்களுக்கு தேவையான வாழ்வாதார வசதிகளை இலங்கை அரசு ஏற்படுத்திக் கொடுக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவரான இரா சம்பந்தர் குற்றம்சாட்டியுள்ளார்.

முகாம்களை விட்டு வெளியே வரும் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு அரசாங்கம் தவறி விட்டதாகவும், குறிப்பாக மக்களுக்கு வீடுகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்க அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அவர் தமிழோசையிடம் தெரிவித்தார்.

மேலும் கிழக்கு மாகாணங்களில் வலுக்கட்டாயமாக வெளி ஆட்கள் குடியேற்றப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

இது குறித்த மேலதிக செய்திகளை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.


0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr