வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் புனர்நிர்மாணம் செய்யப்பட்ட சாவகச்சேரி அரசினர் வைத்தியசாலையை சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நேற்று திறந்து வைத்தார்.
கடந்த 20 வருடகால யுத்த நடவடிக்கைகளால் மிக மோசமாகப் பாதிப்படைந்த சாவகச்சேரி வைத்தியசாலையின் வௌ;வேறு பிரிவுகள் அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் அவ்வப்போது புனர்நிர்மாணம் செய்யப்பட்டு வைத்திய சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வந்தன.
யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கலாநிதி ஆ.கேதீஸ்வரன் தலைமையில் நேற்று நடைபெற்ற புதிய வைத்தியசாலை கட்டிடத் திறப்பு விழாவில் பிரதம அதிதிகளாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜி.ஏ.சந்திரசிறி ஆகியோர் கலந்துகொண்டதுடன் தேசிய மற்றும் மாகாணக் கொடிகளை ஏற்றி வைத்தமையைத் தொடர்ந்து வைத்தியசாலையின் பெயர்ப் பலகையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் திரைநீக்கம் செய்து வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை வைத்தியசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டமைக்கான நினைவுக் கல்லை திரைநீக்கம் செய்து வைத்த அமைச்சர் இந்த வைத்தியசாலைக்கான புதிய வெளிநோயாளர் பிரிவு மருந்துக் களஞ்சியம் என்பனவற்றைத் திறந்து வைத்ததுடன் புதிய நோயாளர் விடுதியொன்றையும் திறந்து வைத்தார்.
இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய நிக்கோட் திட்டப் பணிப்பாளர் ரீ.லங்காநேசன் யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதனை அடுத்து அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களும் வட மாகாண ஆளுனர் ஜி.ஏ.சந்திரசிறியும் இணைந்து வடபகுதி மக்களின் அடிப்படை அத்தியாவசியத் தேவைகளை தீர்ப்பதற்காக அயராது மேற்கொண்டுவரும் பணிகளுக்கு தமது பாராட்டுகளையும் நன்றியையும் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டார்.
சாவகச்சேரி வைத்தியசாலைத் திறப்பு விழாவில் உரைநிகழ்த்திய வட மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி வன்செயல்களால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட தென்மராட்சி பிரதேசம் அபிவிருத்திக்காக முன்னுரிமையளிக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் இந்த வைத்தியசாலையை துரிதமாக புனரமைத்தமைக்கு அனைத்துத் தரப்பினரும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களிற்கு நன்றிகளைத் தெரிவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
போரின் பாதிப்பிலிருந்து மீள்வதற்கான அபிவிருத்தியின் முக்கியத்துவத்தைக் கவனத்திற்கொண்டு உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கிடைக்கின்ற சந்தர்ப்பங்களை தமிழ்பேசும் மக்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதை சுட்டிக்காட்டியதுடன் இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தியை இத்துறை சார்ந்த சமூகம் சரியாகப் பயன்படுத்தியமையால்தான் இன்று புதிய கட்டிடத்தை திறக்க முடிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வைத்தியசாலையின் அபிவிருத்தி மட்டுமல்லாது இப்பகுதி மக்களின் எதிர்காலத்தை மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்பும் இப்பகுதி மக்களின் கைகளிலேயே இருப்பதாகச் சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அத்தகைய வாய்ப்புகளை மக்களின் ஈடேற்றத்திற்காக தம்மை அர்ப்பணித்து சேவையாற்றுபவர்களின் கரங்களை பலப்படுத்த முன்வர வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சாவகச்சேரி வைத்தியசாலைக் கட்டிடத் திறப்பு விழாவில் யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் ஈ.பி.டி.பி.யின் தென்மராட்சி அமைப்பாளர் சூசைமுத்து அலக்ஸ்சாண்டர் சாள்ஸ் உட்பட பெருமளவு பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக