டாக்டர் பட்டம் பெறும் அளவு நான் பெரிதாக சாதிக்கவில்லை என்று திரைப்பட இயக்குநர் கேஎஸ் ரவிக்குமார் கூறினார்.
சென்னை மதுரவாயலில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தின் 18-வது பட்டமளிப்பு விழா வேலப்பன்சாவடியில் உள்ள ஏ.சி.எஸ். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நேற்று நடந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், சினிமா டைரக்டர் கே.எஸ்.ரவிக்குமார், விஞ்ஞானி வி.கே.சரஸ்வத், கல்வியாளர் ஆர்.பி.சத்தா ஆகியோருக்கு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் பேசுகையில், "டாக்டர் பட்டம் பெறும் அளவுக்கு பெரியதாக எதையும் நான் சாதிக்கவில்லை. இந்த பட்டத்தைப் பெற்ற பிறகு ஏதாவது சாதித்தாக வேண்டும் என்ற உந்துதல் ஏற்பட்டுள்ளது" என்றார்.
டாக்டர் கனவு நிறைவேறிவிட்டது: கபில்தேவ்
இவ்விழாவில் பேசிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், "நான் ஒரு பேச்சாளர் இல்லை. நான் ஒரு விளையாட்டு வீரர். எனக்கு விளையாட மட்டுமே தெரியும்.
எங்கள் அம்மா தனது இரண்டு குழந்தைகளில் ஒருவர் வக்கீலாகவும், ஒருவர் டாக்டராகவும் வேண்டும் என்று விரும்பினார். ஒருவர் வக்கீலாகிவிட்டார். நான் டாக்டராகவில்லை. இன்று அந்த கனவும் நனவாகிவிட்டது.
உலகம் முழுவதும் சென்று நான் கிரிக்கெட் விளையாடிய போதிலும் சென்னைக்கு வரும்போதெல்லாம் மிகவும் சிறப்பாக விளையாடினேன். அதனால் சென்னை நகரத்தை எனக்கு மிகவும் பிடிக்கும். அற்புதமான சென்னை நகரை மிகவும் நேசிக்கிறேன்.
எனக்கு கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்த டாக்டர் எம்.ஜி.ஆர்.பல்கலைக் கழகத்திற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக