வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மக்கள் தற்போது பெய்துவரும் தொடர்மழையால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.
நேற்று இரவு வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து 3150 இற்கும் மேற்பட்டவர்கள் பஸ் மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு துரையப்பா விளையாட்டரங்கில் இறக்கி விடப்பட்டனர்.
அடைமழையின் மத்தியில் இரண்டு கட்டங்களாக அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நேற்று மாலை துரையப்பா விளையாட்டரங்கிற்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கான பதிவுகள் மற்றும் பணக் கொடுப்பனவுகள் செயலக அலுவலர்கள் மற்றும் நல்லூர் சண்டிலிப்பாய உடுவில் பிரதேச செயலக ஊழியர்கள் மேற்கொண்டார்கள்.
சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கான மீள் குடியேற்றக் கொடுப்பனவுகளை வழங்கினார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ் உட்பட மற்றும் அலுவலர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.
இரண்டாம் கட்டமாக மேலும் 1500 இற்கும் மேற்பட்டவர்கள் இரவு பத்து மணியளவில் அழைத்து வரப்பட்டனர். நள்ளிரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கொண்டுவந்த உலர்உணவுப் பொருட்களான அரிசி, மா மற்றும் கருவாடு போன்றவை மழையில் நனைந்துவிட்டதாக பொது மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.
நள்ளிரவு வேளை அழைத்து வரப்பட்ட மக்கள் மழை காரணமாக இருக்கக் கூட இடமில்லாது பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக