புலிகள் ‘தமிழ் ஈழம் காண்கிறோம்’ என பெரும் படை பட்டாளங்களை கட்டியமைத்து, தமிழ் மக்களின் சொத்துக்களையும், அவர்களது பிள்ளைகளையும் கொள்ளையடித்து நாசமாக்கி, இறுதியில் தம்மையும் அழித்துக் கொண்ட பின்னர், தாயகத்தில் வாழ்கின்ற தமிழ் மக்கள் ‘சூடு கண்ட பூனைகளாக’ இப்பொழுது சரியான திசைவழியில் தகவமைத்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர்.
ஆனால் புலிகளின் புண்ணியத்தால் வேலை வெட்டிக்குப் போகாமல், புலம்பெயர் தமிழர்களின் பணத்தில் சுகசீவியம் நடாத்தி வந்த ‘ருசி கண்ட பூனைகளான’ புலம்பெயர் புலி வால்கள், இன்னமும் தமது பண கொள்ளையை விட்டபாடாக இல்லை. இப்பொழுது அவர்கள் தூக்கிக் கொண்டு திரிவது ‘வட்டுக்கோட்டை தமிழீழத் தீர்மானம் ;என்ற செத்து பல வருடங்களாகி, புழுத்துப் போன தமிழீழ பிரேதத்தையாகும். அந்தப் பிரேதத்தை வைத்து, தமிழர்கள் வாழும் ஒவ்வொரு புலம்பெயர் நாடுகளிலும் ஒப்பாரிப் பிலாக்கணம் வைத்துத் திரிகின்றனர்.
‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டத்தை பிரட்டப் போகிறேன்’ என்ற கணக்காக, ஆனானப்பட்ட பிரபாகரனால் ஆக முடியாத தமிழீழத்தை, இந்த காசு கறக்கும் விண்ணன்கள் ஏற்படுத்தப் போவதாக பிதற்றித் திரிவது சுத்த ‘ஹம்பக்’ ஒழிய வேறொன்றும் அல்ல.
புலிகளின் கோட்டை என வர்ணிக்கப்படும் நோர்வேயில் வாழுகின்ற தமிழர்களில் 87 வீதம் பேர், இந்த சுத்துமாத்து பேர்வழிகளின் தேர்தல் பம்மாத்தை நிராகரித்துவிட்ட நிலையில், இப்பொழுது தமிழர்கள் அதிகம் வாழும் கனடாவில் நாளைய தினம் (டிசம்பர் 19) தமது கைவரிசையை காட்ட புறப்பட்டுள்ளனர். ஆனால் புலி வால்களின் மோசடிகளால் கடந்த காலத்தில் பல துன்பங்களை அனுபவித்துவிட்ட கனடிய தமிழ் மக்கள் இம்முறை இவர்களுக்கு செப்பமான பாடம் புகட்டக் காத்திருக்கின்றனர்.
கனடாவில் நாளைய தினம், தமது தேர்தல் கோமாளி கூத்தில் பங்குபற்ற வரும்படி, யாராவது புலி வால்கள் பொதுமக்களை மிரட்டினால், அவர்கள் எவ்வித பயமோ தயக்கமோ இன்றி கனடிய பொலிசாரிடம் முறைப்பாடு செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளை இங்குள்ள தமிழ் சமூகத்தின் மத்தியில் செயற்படுகின்ற ஜனநாயக சக்திகள் செய்த வைத்துள்ளன.
புலிகளின் பெயரால் தொடர்ந்து புலம்பெயர் தமிழர்களிடம் பணம் கொள்ளையடிப்பதையே நோக்கமாக கொண்டு செயல்படும் இந்த மோசடி கும்பலின் சதிக்கு ஆளாகாமல் தவிர்த்துக் கொள்வது, ஒவ்வொரு கனடிய தமிழனினதும் கடமையாகும். இனிமேலாவது நீங்கள் குளிரில் நடுங்கி, நித்திரையின்றி வேலைசெய்து உழைக்கும் பணத்தை இந்த மோசடிக் கும்பல் அபகரித்த கொள்ளாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
இந்த தேர்தல் மோசடி நாடகத்தை முற்றாக பகிஷ்கரித்து புலி வால்களுக்கு தகுந்த பாடம் புகட்டுங்கள்!
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக