இருபத்தி இரண்டாவது தியாகிகள் தினம்.



வாசகர்கள்அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்


இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்jkr 2013 - (Free Animated gif-Download the Original size of this photo)

1990 முதல் 2009 வரை அட்டைகளின் (புலிகளின்) ஆட்சியில்……

JKR  ஞாயிறு, 21 மார்ச், 2010

நடந்த வன்கொடுமைகள்! (பகுதி 6)

(கிறேசியன், நாவாந்துறை)

மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞரைக் காட்டி அவர் யார் என்று கேட்டேன்? அவர்தான் ஈ.பி.ஆர்.எல்.எப். யாழ் மாவட்டப் பொறுப்பாளர் தோழர். முகுந்தன் என்றார். அவர் பட்டிருக்கும் சித்திரவதையை ஒப்பிடும் போது நாம் பட்டவை சாதாரணமாகத்தான் தெரிந்தது எனக்கு. அவரிடமும் ஏதோ விசாரித்துவிட்டு தனியாக அமரவைத்தனர்.


ஏறக்குறைய இரண்டுமணி நேரம் கழித்து மீண்டும் ஒரு பெரிய பேப்பர் கட்டுடன் வந்தனர் வான்மீனும் ஏனைய இரு புலிகளும். எனது பெயர். உறவினர் பெயர் விவரங்கள், நண்பர்களது பெயர் விபரங்கள் போன்றவற்றை எழுதிப் பதிவு செய்து கொண்டனர். இரவு ஏழுமணியளவில் எனது பழைய இருப்பிடத்துக்கு அழைத்துச் சென்றனர்.

விசாரணை என்று எதுவும் இல்லை! வெறும் அடியும் சித்திரவதையும்தான் விசாரணை என்ற பெயரில் நடக்கிறது. விசாரணை நடத்துவதற்கான எந்தவிதத் தகுதியும் இல்லாத வெறும் விடலைக் கொலைகாரர்கள்தான் துப்பாக்கிகளுடன் அதிகாரிகளாக உருமாறியிருந்தனர்.

முக்கிய இருப்பிடமான கோடுகளால் வரையப்பட்ட அந்த சதுரத்துக்குள் நான் அமர்ந்தேன். எனக்கு அருகில் றொலக்ஸ் முதலாளி தனது சதுரக் கோட்டுக்குள் நிமிர்ந்து விறைப்பு ஏற்பட்டவர் போல் சப்பணி போட்டு அமர்ந்திருந்தார்.

எனது கால்களை மடித்துக்கொண்டு இருக்க முடியவில்லை. பின்பகுதியிலும் பலமாக அடித்ததால் என்னால் சரியாக அமர முடியவில்லை. வலியினால் சற்றுச் சரிந்தேன். காவலுக்கு நின்ற புலி ஒன்று நேராக என்னை நோக்கி வந்து தனது காலால் எனது விலாப்பகுதியில் உதைத்தார். “எழும்படா” “சரியா அந்தப் பெட்டிக்குள் இருக்கவேணும்” என்றார். மதியம் அடித்த அடிகளால் விலாபகுதியில் கண்டல் ஏற்பட்டிருந்தது. இவர் உதைத்ததும் சதை பிய்ந்து போவது போன்று இருந்தது. கைவிலங்கை அகற்றினால் என்னால் சரியாக இருக்க முடியும் என்றேன். “அது வேறையா” என்று இன்னும் ஓர் உதை விட்டார் நெஞ்சினில். எனது வாயை சற்று அமைதியாக வைத்திருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.

பகலிலும் சாப்பிடவில்லை. எனக்கு என்று உணவு எடுத்து வைத்திருந்தார் மூன்றாவது கோடுபோட்ட கட்டத்துக்குள் இருந்தவர். அந்த உணவுத் தட்டை என்னருகில் தள்ளிவிட்டார் அவர். ஆனால் எனது கைகளால் அந்தத் தட்டை எடுக்க முடியவில்லை. கையும் விரல்களும் விறைத்துப் போய் இருந்தன. நான் விரல்களை முன்னும் பின்னுமாக அசைத்தேன், வலிதான் ஏற்பட்டது. அந்த நேரம் இன்னும் ஓர் புலி வந்தது. உணவுத் தட்டையும் என்னையும் பார்த்துவிட்டு கைவிலங்கை கழற்றிவிடும்படி இன்னுமோர் புலிக்குச் சொன்னார். அவரும் வந்து கழற்றிவிட்டு விலங்கை எடுத்துச் சென்றார். தட்டில் இருந்த உணவை கைகளில் கொட்டும்படி கூறி அப்படியே உண்டேன். தண்ணீர் குடித்ததும் என்னை அறியாமலேயே சரிந்து விழுந்து உறங்கிவிட்டேன்.

மறுநாள் காலை எழுந்திருக்க முடியவில்லை. கண்விளித்த போது “ஏன்தான் உலகம் விடிகிறதோ” கடந்த இரவு உறக்கத்தில் இருந்திருந்தால் நல்லது போல் தோன்றியது அன்று. என்னால் எழுந்திருக்க முடியாது என்பதை அங்கே இருக்கும் மருத்துவம் பார்ப்பவர் புரிந்து கொண்டார் போலும், நான் கேட்காமலேயே அவர் “மூவ்” ஓயின்மென்ரைக் கொண்டு வந்தார். அவருக்கும் கால்களில் சங்கிலி விலங்கிட்டு வெல்டிங் செய்யப்பட்டிருந்தது. அவர் என்னை தூக்கி அமர வைத்து அந்த கழிம்பை எனது உடலில் தேய்த்துவிட்டார்.

அவரது பெயரை மறந்து விட்டேன். அவர் யாழ்ப்பாணம் பொது மருத்துவ மனையில் பணியாற்றியுள்ளார். மருந்துகள்பற்றி அவருக்கு ஓரளவு தெரியும். இவர் ஈ.பி.ஆர்.எல்.எப். உறுப்பினர்களுக்கு உதவிகள் செய்துள்ளார். அதனால் இவரை அடிமையாக்கி விலங்கிட்டு இங்கு வைத்துள்ளனர். அவரும் பல கண்டங்களைத் தாண்டி உயிருடன் இருப்பதாகக் கூறினார்.

காலைக் கடன் கழிக்க நான் கழிவிடம் செல்லவில்லை. ஏனையோர் தங்கள் கடன்களை கழித்து மீண்டும் வந்து அமர்ந்தனர். புலிகள் வந்தனர், வழக்கம் போல் பட்டியலில் உள்ள இலக்கங்களைப் படித்தனர். 10பேர் வரை எழுந்து சென்றனர். ஏனையோர் அவர்களது முகங்களை அனுதாபத்தோடு பார்த்தனர். அப்படி எழுந்து சென்றவர்களில் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளரும் இருந்தார். இலக்கத்தை அழைத்த புலியின் அருகில் சென்றதும் அந்தப் புலி எப்படியிருக்கிறாய் குகன்? என்று முதுகில் தட்டினார். றொலெக்ஸ் ஹொட்டலின் உரிமையாளின் பெயர் குகன் என்பது அப்போதுதான் எனக்குத் தெரிந்தது.

கால்விலங்குடன் 10பேரும் வரிசையாக நடந்து ஏற்கனவே என்னைச் சித்திரவதை செய்த பகுதிக்கு அழைத்துச் சென்றனர். சிறிது நேரத்திலெல்லாம் மரண ஓலம் கேட்க ஆரம்பித்தது. இந்த ஓலங்களைக் கேட்டு அங்கிருந்தவர்களுக்குப் பழகிவிட்டது போலும், மரணத்தை நோக்கி இருப்பவர்களுக்கு இவை எல்லாம் வலியாகத் தோன்றவில்லைப் போலும்.

சுமார் 10மணியளவில் மூன்று பேர் எங்கள் பகுதிக்கு வந்தனர். உள்ளே வந்த ஒருவர் அமர்ந்திருக்கும் ஒரு இளைஞரை சைகையினால அழைத்தார். இவர் எழுந்து புலியின் அருகில் சென்றார். இன்னும் அருகில் வரும்படி கூறினார். அருகில் சென்றதும் அந்தப் புலி தனது வலது உள்ளங்கையினால் அந்த இளைஞரது மூக்கில் குத்தினார். இரத்தம் சீறிட்டுப் பாய்ந்தது, “போய் இரடா இடத்தில்” என்று கூறிவிட்டு வெளியே சென்றுவிட்டார்.

எந்தவிதத் தொடர்பும், சம்பந்தமும் இல்லாமல் ஒருவர் வந்து இளைஞர் ஒருவரின் மூக்கை உடைத்துவிட்டுச் செல்கிறார். யார் இவர்? ஏன் இப்படிச் செய்துவிட்டுச் செல்கிறார்? என்பதை அறிய ஆவலாக இருந்தது. எனது சதுரக் கோட்டுக்கு இடது புறமாக 55, 60 வயது மதிக்கத் தக்க ஒருவர் இருந்தார். இவரை எதற்காக அழைத்துவந்துள்ளனர் என்று அவரிடமும் கேட்க வேண்டும் என்ற ஆவல் அதிகமாகவே இருந்தது எனக்கு.

முதலில் மூக்குடைக்கும் நபரை அறிவோம் என்ற எண்ணத்தில் அவரிடம், “ஐயா உங்கள் பெயர் என்ன என்று கேட்டேன். “ அப்பையா” என்றார். அப்பையா அண்ண, இப்பவந்து ஒரு சகோதரனது மூக்கை உடைத்துவிட்டுப் போகிறாரே அவர் பெயர் என்ன என்று கேட்டேன்.

தன்னைச் சுற்றி நோட்டம் விட்டார் அப்பையா அண்ணன். தலையைக் குனிந்து கொண்டு சொன்னார், இவன் தான் கேடி. இவன் மகா கொடியவன், கொடோனுக்குள் வந்தால் இரத்தம் காணாமல் செல்ல மாட்டான். இன்றைக்கு மட்டும் தான் ஒரு தம்பியின் மூக்கை உடைத்துவிட்டுச் சென்றுள்ளான். கடந்த ஒரு கிழமையாக இவனைக் காணவில்லை, இன்றைக்குத்தான் வந்துள்ளான். ஒவ்வொரு நாளும் வருவான் தனது கண்ணில் யார் படுகின்றனரோ அவரை அழைப்பான் அருகில் சென்றதும் உள்ளங்கையின் அடிப்பகுதியால் மூக்கில் குத்துவான். மூக்கு உடைந்து இரத்தம் வந்தால்தான் விடுவான்.

தப்பிதவறி யாராவது கைகளால் தடுத்தாலோ, தலையை பக்கவாட்டில் சாய்த்தாலோ அவனுக்குக் கோபம் வந்துவிடும். தலை மயிரைப் பிடித்துக்கொண்டு வலது கையை மூடி நேராக மூக்கில் குத்துவான். இரத்தம் கண்டபின் மீண்டும் தலை முடியைப் பிடித்து முன்புறமாக இழுத்து தனது முழங்கையால் முதுகில் குத்துவான். புதிதாக வந்தவர்களைத் தவிர ஏனைய அனைவரும் இவனால் மூக்கு உடைக்கப்பட்டவர்கள்தான். எனது மூக்கையும் இரண்டு தடவை உடைத்துள்ளான். தம்பி உம்முடைய மூக்கையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார்.

இப்போ விசாரணைப் பகுதியில் அலறும் சத்தம் அதிகரித்துக் கொண்டிருந்தது, கேடியும் அப்பகுதிக்குச் சென்று அந்த இளைஞர்களைத் தாக்கிக் கொண்டிருந்தார். எங்கள் பகுதி காவல் புலிகளும் எதையோ சாப்பிட்டுக்கொண்டு விசாரணைப் பகுதியைப் பார்த்துக்கொண்டிருந்தனர். நான் அப்பையா அண்ணனிடம், அண்ண, உங்களை எதற்காகப் பிடித்து வந்தவையள்? என்று கேட்டேன்.

தம்பி, என்னுடைய மகளை வரதராஜப் பெருமாளின் தம்பி மூர்த்தி திருமணம் செய்துள்ளார். அவரைத் தேடிவந்த இந்தப் புலிகள் என்னை இழுத்துவந்து கொடுமைப்படுத்துகிறார்கள். உன்னை அடித்தது போன்று என்னையும் கொடுமைப்படுத்தினார்கள். பலதடவை என்னை, இப்படிச் சித்திரவதை செய்யாமல் கொன்று விடுங்கள் என்று கெஞ்சியிருக்கிறேன். கொல்கிறார்கள் இல்லை! என்று அழுவதற்கு ஆரம்பித்தார். நானும் அதற்கு மேல் கேள்விகள் கேட்பதை நிறுத்திவிட்டேன்.

நான் விறைத்துப்போன எனது கைவிரல்களை முன்னும் பின்னும் ஆட்டி பயிற்சி செய்து இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து கொண்டிருந்தேன். எனது பகுதிக்கு ஏறக்குறைய அறுநூறு பேருக்கும் மேல் இருந்தனர் விலங்குகள் இடப்பட்டு. மதிய நேரம் வெய்யில் அதிகமாகும் போது மனித வியர்வையும் அதிகரிக்கும். அந்தக் கோடவுண் முழுவதும் வியர்வை நாற்றம் ஏற்பட்டுவிடும், வெறும் உடலில் சட்டை எதுவும் யாருக்கும் கிடையாது. பலர் வெறும் சரத்துடனும், சிலர் வெறும் கால்சட்டையுடனும்தான் இருந்தனர். புலிகள் வரைந்த கோடுகளுக்கு நடுவில் அனைவரும் வரிசையாக அமர்ந்திருப்பதை எழுந்து நின்று பார்த்தால் ஆங்கிலேயர் ஆப்பிரிக்காவில் கறுப்பின மக்களை அடிமைகளாக்கி விற்பனைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்படும் திரைப்படக் காட்சிகள் நினைவுக்கு வரும்.

பிற்பகலில் உணவு வந்தது. சோறு, அதனுடன் சோயா பீன்சும் பருப்பும் கலந்த சாம்பாருக்கும் சொதிக்கும் இடைப்பட்ட ஓர் திரவமாக இருந்தது. நான் வீட்டினில் மூன்று பிளேற் சோறு சாப்பிடுவேன். இப்படி அதிகமாகச் சாப்பிடாதேயடா என்று அம்மா கூட அடிக்கடி சொல்வா, இவர்கள் கொடுத்தது பாதிப் பிளேற் அளவு சோறுதான். பிளேற்றைப் பார்த்ததும் இதயம் கனத்தது. இந்தச் சோற்றைச் சாப்பிட்டு எனது பசி எப்படி அடங்கப் போகிறது என்று பெரும் கவலையாக இருந்தது. வேறு வழி கிடையாது. வலித்துக் கொண்டிருந்த கைகளைப் பயன்படுத்தி சோற்றைக் குழைக்காமல் அள்ளி வாயில் போட்டு உண்டேன். சாப்பிட்டு முடிந்ததும் எல்லாரும் பெட்டிகளுக்குள் சரியாக அமரும்படி புலிக்காவலாளி ஒரு உரத்த குரலில் கத்தினார். அவரது உத்தரவுபடி நாங்கள் நிமிர்ந்து கோடுகளில் நடுவில் அமர்ந்தோம்.

மாலை ஆறுமணியளவில் விசாரணைக்காகக் கொண்டு செல்லப்பட்ட சகோதரர்களை அழைத்து வந்தனர் புலி விலங்குகள். நடக்க முடியாமல் நொண்டிக்கொண்டும், சரிந்த நிலையிலும், சிலர் கால் சங்கிலி தடக்கி விழுந்து எழுந்தும் எமது மண்டபத்துக்கு வந்து சேர்ந்தனர். எனக்கு அருகில் வந்து நின்றார் றொலெக்ஸ் ஹொட்டல் உரிமையாளர் குகன்.

அவரால் நிலத்தில் அமர முடியவில்லை. அமருவதற்கு முற்பட்டவர் விழுந்து போவேனோ என்று பயந்தார். நான் சற்று அருகாமையில் நகர்ந்து எனது தோளில் கைகளை ஊன்றிக் கொண்டு அமரும்படி கூறினேன். அவரும் எனது தோளில் கையை வைத்தார். அவருக்கும் கைவிலங்கிட்டு அடித்திருப்பார்கள் போலும், ஐயோ, அம்மா என்று அலறிக்கொண்டு அமர முற்பட்டார். அவரது நிறை ஏறக்குறைய 120 கிலோவுக்கும் மேல் இருக்கும். அவர் கைவைத்த எனது தோள்பகுதி ஏற்கனவே புலி விலங்குகளின் அடியால் கண்டலாகி இருந்தது. குகன் அழுத்தி அமர்ந்ததில் எனக்கும் வலி அதிகமானது.

அமர்ந்ததும் குகன் அழுவதற்கு ஆரம்பித்தார். நான் எந்தத் தவறும் செய்ய வில்லை. ஈ.எபி.ஆர்.எல்.எப். உறுப்பினர்கள் உயிர்தப்பிச் செல்ல உதவினேன். புலிகள் கூட என்னிடத்தில் உதவிகள் பெற்றனர். ஐ.பி.கே.எப். இருந்த போது புலிகளுக்கு உணவு கொடுத்துள்ளேன். காசு கொடுத்துள்ளேன், வேறுபல உதவிகள் கூட செய்துள்ளேன். தமிழ் இளைஞர்கள் கொல்லப்படும் போது அவர்களைக் காப்பாற்ற உதவி செய்தேன். அதற்காக இப்படிக் கொடுமைப் படுத்துகிறார்களே என்று மீண்டும் மீண்டும் விக்கலெடுத்து அழுதார்.

அவரது உடல் முழுவதும் சிவந்து இரத்தக் கண்டல்களாக இருந்தன. இவரை விசாரித்த புலிவிலங்கின் பெயர் அம்புறோஸ், துணைக்கு நின்ற புலி விலங்குகள் மஞ்சு மற்றும் கௌதமன் ஆகிய இருவரும் ஆவர். குகனை மிக அதிகமாகத் தாக்கியவர் மஞ்சுதான்.

குகன் எந்த இயக்கத்திலும் அங்கத்தினர் அல்ல, தமிழர்கள் அனைவரும் விடுதலைக்காக ஏதாவது ஓர் இயக்கத்தினை ஆதரித்தனர் என்பது நாடறிந்த உண்மை. தமிழ் மக்களது உணர்வுகள் வெளிப்படுத்தப்பட்டது விடுதலைக்காகத்தான். விடுதலை இயக்கங்களை வழி நடத்தியவர்கள் தமிழ் மக்களது தியாக உணர்வினை சரிவரப் பயன்படுத்தத் தெரியாதவர்களாக இருந்தனர். தொண்டர்களும் உறுப்பினர்களும் தம்மை அர்ப்பணிக்க முன்வந்தனர். தலைமைகளுக்கிடையில் புரிந்துணர்வு, விட்டுக்கொடுப்பு, கூட்டுத் தலைமை என்பன போன்ற பொதுத் திட்டங்கள் இருந்ததில்லை. துப்பாக்கி ஏந்திய வல்லுநர்கள் ஏனையோரை அழித்துவிட்டு ஆதிக்க வாதிகளாக தம்மைக் காட்டிக்கொள்ள தமிழ் இளைஞர்கள் பலியிடப்பட்டனர்.

எனக்கு மருந்து தடவிய அதே தயாபரன் மீண்டும் வின்டோஜனுடன் வந்தார்.

(தொடரும்…)

0 கருத்துகள்:

உங்கள் கருத்தை யுனிகோட்டில் பதிவு செய்யுங்கள் ...
jkr jkr