இந்திய - சீன நாடுகளிடையே பரஸ்பரம் நல்லுறவு நிலவுவதையே நான் விரும்புகிறேன். இப்பிராந்தியத்தில் அமைதி நிலவ இரு நாடுகளிடையே நல்லுறவு அவசியம் தேவை என திபெத்திய மதத் தலைவர் தலாய் லாமா தெரிவித்துள்ளார்.
போபாலில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"இரு நாடுகளுமே அவரவர் செயல்பாடுகளில் உறுதியாகவும், வலுவாகவும் திகழ்கின்றன.
சீனாவிலிருந்து திபெத்தைத் தனி நாடாகப் பிரிக்க வேண்டும் என்பது தனது நோக்கமல்ல. அதேசமயம் திபெத்துக்கு சுய அதிகாரம் வழங்கப்பட வேண்டும் என்பதே தனது கோரிக்கையாகும்.
திபெத்தில் உள்ள இளைஞர்கள் அமைப்பு பெரும்பாலும் தனி நாடு கோரிக்கையை வலியுறுத்துகின்றன. ஆனால் அதை நான் ஒப்புக்கொள்ளவில்லை.
நாட்டில் அமைதி நிலவும் சூழலில் கட்டுப்பாடு தேவையற்றது. இதனால் எவ்வித பயனும் ஏற்படாது. சீனர்கள் மிகவும் புத்திசாலிகள். அவர்களிடம் போய்ச் சேர வேண்டிய விஷயத்தை உரிய வகையில் தெரிவித்தாலே போதுமானது.
திபெத் குறித்து நான் இதுவரை வலியுறுத்தி வந்த விஷயங்களுக்கு ஆதரவாக இதுவரை 800-க்கும் மேற்பட்ட கட்டுரைகள் சீன நாளிதழ்களில் வெளிவந்துள்ளன" என்றார்.
இரண்டு நாள் பயணமாக மத்தியப் பிரதேசம் சென்றுள்ள தலாய் லாமா புதன்கிழமை மாநில சட்டப்பேரவையில் உரை நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக