ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்துடன் புதிய பாராளுமன்றத்தில் பதவியேற்ற பின் முதற்கட்டமாக நாட்டில் புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் ஆரம்பிக்கப்படுமென உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தெரிவித்தார்.
ஒரு நாடு அபிவிருத்தி செய்யப்படவேண்டுமானால் அந்நாட்டில் சாந்தியும், சமாதானமும் அமைதியும் நிலைநாட்டப்படவேண்டியது அவசியமானதாகும். அமைதியற்ற நாட்டில் எத்தகைய முயற்சிகளை மேற்கொண்டாலும் அபிவிருத்தியை எட்டமுடியாது. அத்துடன் அத்தகையதொரு நாட்டில் இவ்வளவு கனிப்பொருட்கள் மூலவளங்கள் உள்ளிட்ட பௌதீக வளங்கள் உள்ள போதும் அவற்றின் மூலம் எந்தவொரு பயனையும் பெறமுடியாது.
கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நாட்டில் இடம்பெற்றுவந்த யுத்தம் நாட்டின் பொருளாதாரத்தை பெருமளவு வீழ்ச்சியடையச் செய்துள்ளது. யுத்தம் முடிவடைந்த பின் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மீளக்கட்டியெழுப்பட்டு வருகிறது. நாட்டில் முழுமையான அமைதியும் சமாதானமும் நிலைநாட்டுப்பட்டு விட்டதாக கருத முடியாது புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை என்று அரசியல் தீர்வு காணப்படுகின்றதோ அன்றுதான் இந்த நாட்டில் சமாதானமும் நிலைநாட்ட முடியும் என்றும் தெரிவித்தார்.
எனவே இதனைக் கருத்திற் கொண்டு புதிய பாராளுமன்றம் பதவியேற்றதையடுத்து முதற்கட்டமாக இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முயற்சியை மேற்கொள்ளவுள்ளனர். எனவே நாட்டுப் பற்றுள்ள அனைவரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் இந்த முயற்சிக்கு ஆதரவு வழங்க வேண்டும். எனவே பாராளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைப் பெற்றுக்கொடுப்பதன் மூலம் ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்க முடியுமெனத் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக