மலேசியாவில் தொழில்வாய்ப்புகளை பெற்றுத் தருவதாககூறி பணத்தை வசூலித்து மலேசியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இலங்கையர் சிலருக்கும் அவர்களை அழைத்துச்சென்ற போலி வேலைவாய்ப்பு முகவருக்குமிடையில் கோலாலம்பூரில் ஏற்பட்ட வாய்தர்க்கம் முற்றியதில் இடம்பெற்ற தாக்குதலில் முகவர் கொல்லப்பட்டுள்ளதாக மலேசியாவில் உள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக 6இலங்கை பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் இரண்டு பேரை கைதுசெய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மலேசிய காவற்துறையினர் இலங்கை தூதரகத்திற்கு அறிவித்துள்ளனர். மலேசியாவில் சிறந்த ஊதியத்தில் தொழில்வாய்ப்புகளை பெற்றுத்தருவதாக கூறிய ஒரு லட்சம்முதல் 5லட்சம் ரூபாவரை பணத்தை அறவிட்டு, குறித்த இலங்கையர்கள் அங்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். சிங்கபூரிலிருந்து சுற்றுலா வீசா அனுமதியில் அழைத்துச்செல்லப்பட்ட இவர்களிடம் தொழில்வீசா அனுமதி பெறவேண்டுமாயின் மேலதிக பணம் தரப்பட வேண்டும் என கொல்லப்பட்ட முகவர் கூறியுள்ளார். இதன்காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து ஏற்பட்ட தாக்குதலில் படுகாயமடைந்த முகவர் கொல்லப்பட்டதாக இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது. சுற்றுலா வீசா அனுமதியில் மலேசியாவுக்கு அழைத்து வரப்படும் இலங்கையரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருவதாகவும் சுற்றுலா வீசா அனுமதியில் சென்று தொழிலில் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் இலங்கை தூதரக அதிகாரியொருவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் போலியான முகவர்களை நம்பி ஏமாறவேண்டாம் என அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். எவ்வாறாயினும் கொல்லப்பட்ட முகவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவுசெய்யாத போலி முகவர் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக