காலாவதியான மற்றும் போலி மருந்து தொடர்பாக, சட்டப் பேரவையில் சிறப்பு கவன ஈர்ப்புத் தீர்மானம் செவ்வாய்க்கிழமை கொண்டு வரப்பட்டது. இந்தத் தீர்மானத்தின் மீது சேகர்பாபு (அதிமுக), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), வேல்முருகன் (பாமக), நன்மாறன் (மார்க்சிஸ்ட்), குணசேகரன் (இந்திய கம்யூனிஸ்ட்), சதன் திருமலைக் குமார் (மதிமுக), ரவிக்குமார் (விடுதலைச் சிறுத்தைகள்) ஆகியோர் பேசினர்.
இதற்கு, முதல்வர் கருணாநிதி அளித்த பதில்:
போலி மருந்து தயாரித்து விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் ஒரு சட்டத் திருத்தத்தை மத்திய அரசு கொண்டு வந்தது.
ஆனால், அதற்கு முன்பு போலி மருந்து அதிலும் காலாவதியான மருந்துகளை விற்பனை செய்தவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்னவென்று பார்த்தால், ஒரு கேலிக்கூத்தாக இருந்திருக்கின்றன.
அபராதமும், தண்டனையும்: ஒரு குற்றத்தில் முக்கிய குற்றவாளி மீனாட்சிசுந்தரம் மீது மருந்துக் கட்டுப்பாட்டு சட்டத்தின்படி மூன்று வழக்குகள் தொடரப்பட்டன.
இதற்கு, ரூ.7 ஆயிரம் அபராதமும், நீதிமன்றம் கலையும் வரையில் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. நீதிமன்றம் கலையும் வரை என்றால், அந்தத் தண்டனையை யார் வேண்டுமானாலும் சுலபமாக ஏற்றுக் கொள்வார்கள்.
இந்த நிலையில், மத்திய அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்தது. போலி மருந்து தயாரிப்பவர்கள் மீது 10 ஆண்டுகள் முதல் ஆயுள் வரையிலான சிறைத் தண்டனை வழங்கவும், குறைந்தபட்சம் ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கவும் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
கொஞ்சம் பரவாயில்லை: போலி மற்றும் காலாவதியான மருந்து பிரச்னையை இரண்டு வகையாகப் பிரித்துக் கொள்ள வேண்டும். போலி மருந்து தயாரிப்பது ஒரு வகை. காலாவதியான மருந்தை விற்பது மற்றொரு வகை. போலி மருந்து தயாரித்தால் அது உயிருக்கே ஆபத்து. காலாவதியான மருந்தை விற்பனை செய்தால் அது எந்த வியாதியையும் குணப்படுத்தாது. காலாவதியான மருந்து, சத்தில்லாத, சாரமில்லாத, எந்த விளைவுகளும் இல்லாத மருந்தாகி விடுகிறது.
ஆனால், போலி மருந்து}எதையோ போட்டு மருந்து என்று ஒன்றைத் தயாரித்துக் கொடுத்தால் அது சமயத்தில் விஷமாகக் கூட ஆகி விடுகிறது.
ஆகவே, பொய் மருந்தாக, போலி மருந்தாக, விஷ மருந்தாக வருகின்ற அந்த மருந்தை விட, காலாவதியான மருந்துகள் கொஞ்சம் பரவாயில்லை என்றே எண்ண வேண்டும்.
இப்போது காலாவதியான மருந்துகளால்தான் மாநிலத்திலே பிரச்னை ஆரம்பமாகியது. இதுதொடர்பாக, அதிகாரிகளை அழைத்துப் பேசி நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் சட்ட திருத்தத்தால், மருந்து வியாபாரிகள் அச்சத்துக்கு ஆளாகி இருக்கிறார்கள்.
சிபிஐ விசாரணைக்கும் தயார்: மருந்துகளை அருந்தி மக்கள் சாகிறார்கள் என்பது சாதாரணமான விஷயமல்ல. அதை உணர்ந்து உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துக் கொண்டிருக்கிறது.
காலாவதியான மருந்துகள் தொடர்பான வழக்கு சி.பி.சி.ஐ.டி.யிடம் மாற்றப்பட்டுள்ளது. நாட்டிலே பல மாநிலங்களில் இது நடைபெறுகின்றது எனத் தெரிய வருமேயானால் மத்தியில் உள்ள சி.பி.ஐ. விசாரணையைக் கேட்கவும் தயங்க மாட்டோம்'' என்றார் கருணாநிதி.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக