வாக்குப் பதிவு மந்தமாக இருந்ததாகவும், ஆங்காங்கே வன்சம்பவங்கள் நடந்திருந்ததாகவும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் தெரிவித்துள்ளன.
கடந்த வருடம் அரச படையினர் விடுதலைப் புலிகளை தோற்கடிக்கடித்ததன் பின்பு அங்கு நடக்கின்ற முதல் நாடாளுமன்றத் தேர்தல் இதுவாகும்.
பல இடங்களில் வாக்குப் பதிவு சுமூகமாக நடந்தது என்றாலும் வாக்களிப்பின்போது நடந்ததாகத் தெரிவிக்கப்படும் தேர்தல் முறைகேடுகள் பற்றி தங்களுக்கு முன்னூறு புகார்கள் வந்துள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் என்ற சுயாதீனக் குழு கூறுகிறது.
இப்புகார்களில் 80 சதவீதமானவை ஜனாதிபதி ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு எதிராகவே தெரிவிக்கப்படடுள்ளன.
கண்டிக்கு அருகே ஓர் இடத்தில் வாக்குச் சாவடிக்கு வந்த எதிர்க்கட்சி முகவர்களை ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் விரட்டி அடித்து, வாக்குச் சாவடிக்குள் அதிரடியாக நுழைந்து, வாக்குப் பெட்டிகளில் வாக்குகளை நிரப்பியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தென்னிலங்கையில் இரு இடங்களில் வாக்குச் சாவடி அருகே துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அவற்றில் யாரும் காயம் அடைந்ததாகத் தெரியவில்லை.
நாடளவில் சராசரியாக 50 முதல் 55 வீதம் வரையிலான வாக்குப் பதிவு நடந்திருப்பதாகக் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். வாக்களிப்பு வீதம் குறித்த அதிகார பூர்வ அறிவிப்பு எதுவும் வியாழனன்று இரவு 9 மணிவரை வரவில்லை.
யாழ்ப்பாணம் பகுதியில் வாக்குப் பதிவு மிகவும் குறைவாக இருந்ததாகத் தெரிகிறது. 18 வீதம் வரையிலான வாக்களிப்பே அங்கு நடந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
கடந்த ஜனவரியில் நடந்த தேர்தலில் இரண்டாவது முறையாக ஜனாதிபதியாகத் தேர்தெடுக்கப்பட்ட மஹிந்த ராஜபக்ஷ, நாட்டின் அரசியலில் தனது செல்வாக்கையும் ஆதரவையும் இந்தத் தேர்தல்கள் வலுப்படுத்தும் என்று நம்புகிறார்.
இலங்கையின் எதிர்க்கட்சிகள் சிதறுண்டு காணப்படுவதாகவும், அரசாங்கத்தை அவர்கள் ஒருமித்த குரலோடு விமர்சித்திருக்கவில்லை என்றும் கொழும்பிலுள்ள எமது செய்தியாளர் கூறுகிறார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக