புளொட் தலைவர் சித்தார்த்தன் எமது அடிப்படை உரிமைகளுக்கான வழிமுறைகளை முன்னெடுக்கக்கூடிய நடைமுறைக்கு தேவையான அரசியல் கோட்பாடுகளை முன்னெடுப்பதுடன், இன்பத்திலும் துன்பத்திலும் மக்களுடன் இணைந்து மக்களை விட்டகலாது மண்ணைப் பாதுகாத்து செயல்பட்டு வருகின்றோம். வெறும் வாய்ச்சொல்லில் தேசியம் தேடுபவர்கள் தமது நீண்ட அரசியல் வாழ்க்கைக்காகவும் அதனூடான சுயலாபங்களுக்காகவும் நடைமுறைக்கு அப்பாலான எதிர்ப்பு அரசியல் அணுகுமுறைகளை வலிந்து கட்டிக்கொள்வதனால் தமிழர்களின் தேசிய இனப் பண்புகள் அழிக்கப்பட்டு சிதைக்கப்பட்டு வருவதையே தொடர்ச்சியாக நாம் கண்டு வந்துள்ளோம் என புளொட் இயக்கத் தலைவர் தி.சித்தாத்தன் ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் மேலும் தொவித்துள்ளதாவது..
பேரினவாதம் எம் நிலங்களை அபகரிக்கவும் எமது மக்கள் தமது வாழ்விடங்களை விட்டு தொடர்சியாக இடம்பெயரவும் எமது சமூகக்கட்டமைப்புகளும் இனப்பரம்பலும் சின்னாபின்னப்படவும் “கூடிய நடவடிக்கைகள் எதுவும் எமது தேசியத்தைக் காக்கும் நடவடிக்கைகளல்ல. யுத்தத்தினால் இன்று வன்னியில் ஏற்பட்டுள்ள அழிவுகளைத் தான் 1990ல் வவுனியாவிலும்“ குறிப்பாக வவுனியா நகரிலும் காணமுடிந்தது. வவுனியாவில் இருந்த மக்கள் இடம்பெயர்ந்தனர். எல்லைப்புறக் கிராமங்களில் தமிழ் மக்கள் வாழமுடியாத நிலை. இந்த நேரத்தில் புளொட் அமைப்பினராகிய நாங்கள் இராணுவத்தினரின் கெடுபிடிகளுக்கு மத்தியிலும்“ அழிந்த இடங்களை சீரமைத்து மக்கள் தங்கள் சொந்த இடங்களில் மீளகுடியேற உதவிகள் செய்தோம். எல்லைப்புற மக்கள் அச்சமின்றி வாழ வழிவகுத்தோம். இன்று வடக்கு கிழக்கில் இராணுவ பாதுகாப்பு பிரதேசங்கள் உருவாக்கப்பட்டு அங்கு வாழ்ந்த மக்கள் இடம்பெயர்ந்து அகதிகளாக்கப்பட்டுள்ளனர். அந்த நிலை வவுனியாவில் 1990ல் ஏற்பட இருந்தது. விமான நிலைய விஸ்தரிப்பு, இராணுவ தள விஸ்தரிப்பு என சுற்றியுள்ள கிராமங்களை அரசு உரிமையாக்க முயன்றது. நாங்கள் அதற்கு எதிராக மக்களை அணிதிரட்டி பல போராட்டங்களை நடத்தினோம். குறிப்பாக பாராளுமன்றத்தின் முன்னால் சத்தியாக்கிரகப் போராட்டம் நடத்தி விமான நிலைய விஸ்தரிப்பு, இராணுவ தள விஸ்தரிப்பு என அரசின் அந்த முயற்சிகளை தடுத்து நிறுத்தினோம்.
அரசின் திட்டம் நிறைவேறியிருந்தால் வவுனியா நகரைச் சுற்றியுள்ள இறம்பைக்குளம், கோவில்புதுக்குளம் மற்றும் எல்லைப்பர் மருதங்குளம், சமளம்குளம், போன்ற கிராமங்களும் பறிபோயிருக்கும். இன்று முக்கியத்துவம் வாய்ந்த இராணுவ மற்றும் விமானத் தளமாக விளங்கும் வவுனியா விமானத் தளத்தின் எல்லைகளிலேயே மக்கள் அச்சம் இன்றி வாழ்வதை காணமுடிகிறது. இதேநிலை வன்னியில் ஏற்பட வேண்டும் என்பது எமது உடனடி வேலைத்திட்டமாகும். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இனப்பிரச்சினை முதலிடத்தை வகித்தாலும் உடனடித் தீர்வாக எதிர்பார்ப்பது அகதி வாழ்க்கையிலிருந்து மீண்டு தாம் தமது சொந்த வாழ்விடங்களில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதேயாகும். தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு குரல் கொடுப்போம். அதற்காக மக்களின் அவலங்களில் அரசியல் செய்வதை நிராகரிப்போம். அழிந்து போயுள்ள எமது பிரதேசங்களை மீளக் கட்டியெழுப்புவோம்.. அதற்காக எமது மக்களை அடகு வைத்து சோரம் போகமாட்டோம். தமிழ் தேசியம் என்பது ஒவ்வொரு தமிழனதும் பிறப்புரிமை. அதற்காக அதை வைத்து சுயலாப அரசியல் செய்ய மாட்டோம். எமது தாயகத்தினை சூழ்ந்துள்ள ஆரோக்கியமற்ற அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டு வருவதுடன் ஜனநாயக அரசியல் கலாச்சாரத்தை முன்னெடுத்து செல்லவும் உங்களுடைய ஆதரவு எங்களுக்கு புதிய அத்திவாரமாக அமையும் என நம்புகிறோம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக