கொழும்பு தேசிய நூதனசாலையில் (தேசிய அருங்காட்சியகம்) இருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சில பொருட்கள் கொள்ளையர்களால் திருடப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். நூற்றாண்டுகள் பழமையான வாள்களும் நாணயங்களும் அடங்கலாக விலை மதிப்பற்ற பல பொருட்கள் வெள்ளிக்கிழமை இரவு கொள்ளையிடப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை பேச்சாளர் எஸ்.பி.அஜித் ரோஹன தெரிவித்தார்.
அரச மாளிகைகளில் பயன்படுத்தப்பட்ட 7 வாள்களும் தங்க ஆபரணங்களும், 18ம் நூற்றாண்டைச் சேர்ந்த பல நாணயங்களும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தேசிய நூதனசாலை பணிப்பாளர் நந்தா விக்ரமசிங்க கூறினார். கண்டி இராச்சியத்துக்கு சொந்தமான பொருட்களும் திருடப்பட்ட பொருட்களில் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார். கொள்ளையிடப்பட்ட பொருட்களின் பெறுமதி இன்னும் கணக்கிடப்படவில்லையென நூதனசாலை அதிகாரிகள் கூறுகின்றனர். கூரையின் ஓடுகளை அகற்றிவிட்டு கொள்ளையர்கள் நூதனசாலைக்குள் நுழைந்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது. கொள்ளையர்களுக்கு நூதனசாலை ஊழியர்களின் ஒத்துழைப்பும் இருந்துள்ளதா என்று விசாரணைகளை நடத்தி வருவதாக காவல்துறை பேச்சாளர் மேலும் கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக