வன்னிப் பகுதியிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது யாழ் குடாநாட்டில் பல்வேறு பகுதிகளில் வசித்து வரும் மக்களின் சுயதொழில் முயற்சிகளுக்கு வசதி ஏற்படுத்தும் வகையிலும் அதேநேரம் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வசதியாகவும் இன்றைய தினம் (10) இலங்கை வேலைவாய்ப்புப் பணியகத்தின் மூலம் 245 துவிச்சக்கர வண்டிகள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களிடம் கையளிக்கப்பட்டன.
அமைச்சர் அவர்களது கொழும்பு அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் கிங்ஸ்லி ரணவக்க உட்பட உயரதிகாரிகளும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் செயலாளர் திருமதி ஜெகராஜசிங்கம் உட்பட அமைச்சின் உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் உரைநிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இடம்பெயர்ந்த மக்களின் சுயதொழில் முயற்சிக்கு வசதியாகவும் அதே நேரம் பாடசாலை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு வசதியாகவும் இன்றைய தினம் 245 துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்படுவதையிட்டு தான் மிகுந்த மகிழ்ச்சியடைவதாகவும் இதற்காக மேற்படி பணியகத்தின் பணிப்பாளர் உட்பட அனைத்து ஊழியர்களுக்கும் எமது மக்கள் சார்பில் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்தார்.
மேற்படி பணியகம் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் தனது கிளைகளை ஆரம்பித்து அங்குள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி அப்பகுதிகளில் இருந்து இளைஞர் யுவதிகளை பணிக்கு அமர்த்தி இடைத்தரகர்களின் தலையீடுகளின்றி அப்பகுதி மக்கள் இலகுவாக வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களைப் பெற நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வெகுவிரைவில் மேற்படி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் இதற்காகத் தான் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் மேற்படி நிறுவனத்திற்கும் எமது மக்களின் சார்பாக தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக