மனித உரிமைகளை மேம்படுத்தும் நோக்கில் இலங்கை அரசாங்கம் தயாரித்துள்ள தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டத்தின் முதற்கட்ட திட்டவரைபு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளை மிகவும் மகிழ்ச்சியடைந்தார் என்று மனித உரிமைகள் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
அமைச்சர் சமரசிங்க ஜெனிவா சென்றிருந்தபோது நவநீதம் பிள்ளையுடன் இடம்பெற்ற சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
"நாட்டில் மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் மனித உரிமைகள் அமைச்சின் தலைமையில் பல்வேறு துறைசõர் நிபுணர்களினால் தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. அதன் முதற்கட்ட திட்ட வரைபு என்னிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த முதற்கட்ட வரைபில் காணப்படுகின்ற விடயங்களில் நடைமுறைப்படுத்தக்கூடிய விடயங்களை ஆராய்வதற்கு சட்டமா அதிபரின் தலைமையில் குழு ஒன்றை நான் நியமித்துள்ளேன்.
இந்நிலையில் இந்த தேசிய செயற்பாட்டு வேலைத்திட்டம் தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவை ஆணையாளர் நாயகம் நவநீதம் பிள்ளையுடனான சந்திப்பின் போது தெளிவாக கூறினேன். இது தொடர்பான விடயங்களை கேட்டறிந்த நவநீதம் பிள்ளை மிகவும் மகிழ்ச்சியடைந்ததுடன் இந்த திட்டம் தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஏதாவது ஒத்துழைப்புக்களை கோரினால் அவற்றை பெற்றுக்கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
உண்மையில் அவருடனான சந்திப்பு சிறந்த பயனுள்ளதாக அமைந்தது. நவநீதம் பிள்ளையுடன் இதுவரை காலமும் இடம்பெற்ற சந்திப்புக்களில் இம்முறை இடம்பெற்ற சந்திப்பே மிகவும் சிறந்ததாக அமைந்தது என்று குறிப்பிட முடியும்.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பெற்ற அமோக வெற்றி தொடர்பிலும் நாம் குறிப்பிட்டோம். எதிர்வரும் பொதுத் தேர்தலின் பின்னர் துரித அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டோம்.
இதேவேளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித பேரவையில் அங்கம் வகிக்கும் நாடுகளில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களை சந்தித்து இலங்கைக்கு வழங்கும் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை தொடர்ந்து நீடிக்குமாறு கோரிக்கை விடுத்தோம்.
முக்கியமாக தற்போது இலங்கை அரசாங்கம் மனித உரிமைகளை மேம்படுத்த தேசிய மட்டத்தில் பல நடவடிக்கைகளை மேற்கொண்டுவருவதாகவும் எனவே ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகையை இடைநிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தீர்மானத்தை மீள்பரிசீலனை செய்யுமாறும் அவர்களிடம் கோரிக்கை விடுத்தோம். " எனத் தெரிவித்தார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக