ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமைக்கு எதிராக அவரது பாரியார் அனோமா பொன்சேகாவால் இன்று தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை மனித உரிமை மீறல் மனுவினை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளதுடன் எதிர்வரும் 23ஆம் திகதி விசாரணைக்கு எடுப்பதாக அறிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற நீதியரசர் அசோக சில்வா தலைமையில் நீதியரசர்களான சிராணி திலக்கவர்தன, சந்திரா ஏக்கநாயக்க ஆகியோர் அடங்கிய குழுவினர் மனுவை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தனர்.
ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டமை அடிப்படை மனித உரிமை மீறலாகும் என மனுதாரர் சார்பில் மன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டதுடன், சட்டமா அதிபர்,இராணுவ தளபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஆகியோர் மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டிருந்தனர்.
மனுவைப் பரிசீலனை செய்த நீதியரசர்கள் குழு, ஜெனரல் சரத் பொன்சேகா பொதுத் தேர்தலில் போட்டியிடுவாராயின் அதற்காக ஆவணங்களைத் தயார்படுத்தவும் கையொப்பம் இடவும் வசதிகளை செய்துகொடுக்குமாறு பணித்தது.
எதிர்க்கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன உள்ளிட்ட அரசியல்பிரமுகர்கள் பலர் உயர்நீதிமன்றுக்கு வருகை தந்திருந்தனர். அரசாங்கத்தின் சார்பில் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க, ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத் துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோர் வருகை தந்திருந்தனர்.
அதனை முன்னிட்டு இன்று முற்பகல் முதல் நீதிமன்ற வளாகத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
நீதிமன்ற அறிவிப்பின் பின்னர் அங்கு கருத்து வெளியிட்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க “இது எமக்குக் கிடைத்த முதல் வெற்றியாகும். ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்கு எதிராக ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றுக்கு செல்வார் என்ற அச்சத்தினாலேயே அரசாங்கம் அவரைக் கைது செய்துள்ளது” என்றார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக