மல்வத்தை மஹாநாயக தேரோ |
இலங்கையின் நிலவரம் பற்றி விவாதிக்க பௌத்த பீடாதிபதிகள் அழைப்பு
இலங்கையின் நான்கு பிரதான பௌத்த பீடாதிபதிகள் நாட்டில் உருவாகியிருக்கும் நிச்சயமற்ற நிலையைப் பற்றி விவாதிக்க கண்டியில் எதிர்வரும் 18ம் தேதி மாநாடு ஒன்றை கூட்டியுள்ளனர்.
இலங்கையின் அனைத்து புத்த மத பிக்குகளுக்கும் அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில், நாட்டின் ஜனநாயகம் மற்றும் நல்ல அரச பரிபாலனம் ஆகியவற்றைச் சூழ்ந்திருக்கும் நிச்சயமற்ற தன்மை என்று அவர்கள் குறிப்பிடும் விஷயம் குறித்து விவாதிக்க கண்டி வருமாறு, இந்த நான்கு பீடாதிபதிகள் கோரியுள்ளனர்.
இந்த நிச்சயமற்ற நிலை நாட்டின் எதிர்காலத்துக்கு பேரழிவைத் தரக்கூடிய ஒரு விஷயம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
நாட்டின் முன்னேற்றத்துக்கு புத்த பிக்குகள் நீண்ட நெடுங்காலமாகவே பங்களிப்பு செய்துள்ளதாகவும் இந்த கடிதம் குறிப்பிடுகிறது.
இந்த கடிதத்தில் மல்வத்தை, அஸ்கிரிய, அமரபுர மற்றும் ராமன்ன பீடங்களின் தேரர்கள் கையெழுத்திட்டுள்ளனர்.
இந்த மாநாடு சுதந்திரம் அடைந்த இலங்கையின் வரலாற்றில் முக்கியமானதொன்றாக அரசியல் நோக்கர்களால் கணிக்கப்படுகிறது.
இந்தயா - பாகிஸ்தான் பேச்சுவார்த்தை முயற்சி: வெளியுறவுச் செயலர்கள் பிப்ரவரி 25 சந்திப்பு
2008ம் ஆண்டு நடந்த மும்பையில் தாக்குதலுக்குப் பின்னர் இடைநிறுத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளை இருநாடுகளும் மீண்டும் தொடங்க முயன்றுவருகின்றன.
பாகிஸ்தானிலிருந்து இயங்கும் தீவிரவாதிகளால் தோற்றுவிக்கப்படும் அச்சுறுத்தல்களைப் பற்றி விவாதிக்க தீர்மானமாக இருக்கும் இந்தியா, இந்த பேச்சுவார்த்தைகள் நடத்த கடந்த வாரம் முன்வந்தது.
தான் மையமான பிரச்சினைகள் என்று கருதும் அனைத்து பிரச்சினைகளையும் எழுப்ப விரும்புவதாக பாகிஸ்தான் கூறியது.
காஷ்மீர் யாருக்கு சொந்தம் என்பது குறித்த சர்ச்சையும் இதில் அடங்கும்.
இந்தியாவின் தொழிற் உற்பத்தியில் கணிசமான வளர்ச்சி
இந்தியாவில் ஓர் கார் உற்பத்தி தொழிற்சாலை |
கடந்த பல ஆண்டுகளில் காணப்பட்ட மிகப்பெரிய வளர்ச்சி இதுவாகும். தொடர்ந்து 12 மாதங்களாக இந்த வளர்ச்சி காணப்படுகிறது.
உலக அளவிலான நிதி நெருக்கடியிலிருந்து இந்தியாவின் வலுவான பொருளாதாரம் வேகமாக மீண்டு வருவதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுவதாக செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இதன் காரணமாக, அரசு அளித்துவரும் பொருளாதார ஊக்க நடவடிக்கைகளை திரும்பப்பெறவேண்டும் என்று இந்தியாவின் மத்திய வங்கி அளித்துவரும் யோசனையை அரசாங்கம் ஏற்பதற்கு இந்த புள்ளிவிவரங்கள் வழிகோலும் என்றும் அவர்கள் கருதுகிறார்கள்.
ஹெய்தி பூகம்பம்: ஒரு மாதம் நிறைவு
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் |
ஹெய்தியில் குறைந்தது இரண்டு லட்சத்து முப்பதாயிரம் பேரைக் கொன்ற பூகம்பம் தாக்கி ஒரு மாதம் முடிந்துள்ளதைக் குறிக்கும் நிகழ்வுகள் அங்கு நடந்துவருகின்றன.
பூகம்பத்தில் பலியான பல்லாயிரக்கணக்கானோர் அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகக் கருதப்படும் ஒரு இடத்தில் நடந்த ஒரு பிரார்த்தனை நிகழ்வில் மக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
ஹெய்தி தலைநகர் போர்த் ஓ பிரன்சின் மையப்பகுதியில் இருந்து பூகம்பத்தில் சிதைந்து போன ஒரு தேவாலயத்துக்கு அருகே மற்றுமொரு அஞ்சலி நிகழ்வு நடக்கவிருக்கிறது.
10 லட்சத்துக்கும் மேற்பட்டோர் ஹெய்தியில் வீடிழந்துள்ளனர்.
மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னதாக கூடாரங்கள் அனைவருக்கும் விரைவாகக் கொடுக்கப்படவேண்டும் என்று மக்களில் சிலர் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதாகச் செய்திகள் கூறுகின்றன.
கொழும்பு உயர்நீதிமன்றம் |
பொன்சேகா கைது: வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்டது கொழும்பு உயர்நீதிமன்றம்
இலங்கை ராணுவத்தின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் இலங்கை முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவை விடுதலை செய்யக்கோரி அவரது மனைவி அனோமா பொன்சேகாவும் மற்றுமொரு சட்டத்தரணியும் தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது.
இந்த அடிப்படை மீறல் மனுவை விசாரித்த நீதிபதிகள் அடங்கிய குழு, தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு சில மேலதிக உரிமைகளை வழங்கவும் உத்தரவிட்டிருக்கிறது.
அவரது வழக்குரைஞர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரை அடிக்கடி பார்க்கவும், அவருக்கு மருந்துகள் வழங்க அனுமதி அளித்தும், தடுப்புக்காவலில் இருக்கும் போது அவரை வேறு இடத்துக்கு மாற்றக்கூடாது என்றும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த மனுவை நிராகரிக்குமாறு ஆரம்ப எதிர்ப்பு ஒன்றை அரச தரப்பு முன்வைத்தபோதிலும், உயர்நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது.
தாக்கல் செய்த மனுவை ஆதரித்து வாதாடிய சட்டத்தரணி சிப்லி அசீஸ் , ராணுவச் சட்டத்தின் கீழ் ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி ஒருவரை கைது செய்யமுடியாது என்றும், இச்செயல் அரசியலமைப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறும் செயல் என்றும் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா சார்பில் வாதிடப்பட்டது.
இதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்றம், மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கி மனுவில் கோரப்பட்டுள்ள மேலதிகச் சலுகைகள் குறித்து எதிர்வரும் 23ம் தேதி விசாரணைகளை நடத்த தீர்மானித்துள்ளது.
எதிர்வரும் பொதுத்தேர்தலில் சரத் பொன்சேகா போட்டியிட விரும்பினால் அவருக்கு வேட்பு மனுவில் கையொப்பமிடவும், ஏனைய ஆவணங்களைத் தயாரிக்க இடமளிக்குமாறும் உயர்நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
விசாரணை நடந்தபோது, கொழும்பு புதுக்கடை நீதிமன்ற வளாகத்துக்கு வரும் அனைத்து பாதைகளும் பாதுகாப்புப் படைகளால் மூடப்பட்டிருந்த போதிலும், பெருந்திரளான மக்கள் நீதிமன்ற வளாகத்தை நோக்கி பேரணி ஒன்றை நடத்தினர்.
இலங்கை ஜனாதிபதியை சந்தித்து பொன்சேகாவின் விடுதலை கோரியுள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
மஹிந்த ராஜபக்சவுடன் ரணில் விக்கிரமசிங்க |
பொன்சேகாவின் கைது தொடர்பாக நீதிமன்றம் என்ன தீர்ப்பளிக்கிறதோ அதற்கமைய அரசாங்கம் நடந்துகொள்ளும் என்றும், அவரை விடுதலை செய்வதா அல்லது தொடர்ந்து தடுத்துவைப்பதா என்பது நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஆரம்ப விசாரணைகள் முடிவடைந்ததும் தீர்மானிக்கப்படும் என்றும் தன்னிடம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள் பதிலளித்திருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கின்றார்.
எதிர்க்கட்சிகள் நேற்று கூடி தீர்மானித்ததற்கு அமைவாகவே ஜனாதிபதியை ரணில் விக்கிரமசிங்க சந்தித்துப் பேசியுள்ளதாக ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றிய மேலதிக தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கையில் போர்க்குற்ற விசாரணை வேண்டும் என்று தான் தொடர்ந்து வலியுறுத்தப்போவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையர் அறிவிப்பு
நவநீதம் பிள்ளை |
உலகின் பல்வேறு நாடுகளில் மனித உரிமைகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுவரும் செயற்பாட்டாளர்களுக்கான ஐந்தாவது மாநாடு ஐர்லாந்து நாட்டின் தலைநகர் டப்ளினில் நடந்தது. அந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய நவநீதம் பிள்ளை அவர்கள், இலங்கை விவகாரம் தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் இதனைத் தெரிவித்துளார்.
இலங்கையை பொறுத்தவரை அங்கு போர்குற்றங்கள் நடந்திருக்கின்றன என்று தான் சந்தேகிப்பதாகவும், நடந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை வேண்டும் என்றும் அது சுதந்திரமானதாகவும், நம்பகத்தன்மையுடனும் அமையவேண்டும் என்றும் தான் வலியுறுத்தி வருவதாகவும் நவநீதம் பிள்ளை கூறினார்.
இவ்விவகாரம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் அமைச்சர் தனது அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று தாம் வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
குறிப்பாக போரின் போதும், அதற்குப் பிறகுமான காலகட்டத்தில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து மட்டுமல்லாமல், தேர்தலுக்குப் பிறகு நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்தும் அவர் அரசாங்கத்திடம் பேசவேண்டும் என்று இலங்கை அமைச்சரிடம் தாம் கூறியதாகவும் அவர் கூறினார்.
ஐ.நா. மன்றத்தின் மனித உரிமைகள் அவையில் இந்த விவகாரம் கையாளப்பட்ட விதம் குறித்து தமது அதிருப்தியையும் அவர் வெளிப்படுத்தியுள்ள்ளார்.
எதிர்ப்புக்கு இடையில் ஷாரூக் கான் படம் வெளியாகியுள்ளது
ஐ.பி.எல். எனப்படும் இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளில் இந்த ஆண்டுக்கான ஆட்டங்களுக்கு பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் ஒருவர் கூட தேர்வு செய்யப்படாதது குறித்து ஷாரூக் கான் ஏமாற்றம் தெரிவித்திருந்தார்.
அதற்குக் கண்டனம் தெரிவித்த சிவசேனை கட்சியினர், ஷாரூக் கான் நடித்த படத்தை திரையிட அனுமதிக்க மாட்டோம் என்று எச்சரித்திருந்தன.
வெள்ளிக்கிழமை காலை, மும்பையில் அந்தத் திரைப்படத்தை திரையிட பல திரையரங்குகள் தயக்கம் காட்டின. எனினும், பிற்பகலில் பெரும்பாலான திரையரங்குகளில் அந்தப் படம் திரையிடப்பட்டது.
பல இடங்களில் சிவசேனை கட்சியினர் வன்முறையில் ஈடுபட்டார்கள். பாந்ராவில் ஷாரூக் கான் அலுவலகம் மீது கல்வீசித் தாக்கப்பட்டது.
குஜராத்தின் ஆமதாபாத் நகரிலும், மத்தியப் பிரதேசம், ஒரிஸா மற்றும் கோவாவில் ஓரிரு இடங்களிலும் போராட்டம் நடைபெற்றது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக