35 ஊடகவியலாளர்களை குறிவைத்து அரசாங்க புலனாய்வுப் பிரிவு தாக்குதல் பட்டியல் ஒன்றை தயாரித்துள்ளது என்று சர்வதேச மன்னிப்பு சபை தெரிவித்துள்ளமை உண்மையாயின் அந்த பட்டியலை பகிரங்கமாக வெளியிடுமாறு பாதுகாப்பு அமைச்சு மன்னிப்பு சபையிடம் சவால் விடுத்துள்ளது.
இது பற்றி பாதுகாப்புபு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவிக்கையில்,
கடந்த நான்கு வருடங்களாக அரசாங்கத்துக்கு எதிராக அபாண்டமான குற்றச் சாட்டுக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன சர்வதேச மன்னிப்பு சபை போன்ற அமைப்புக்களே இத்தகைய குற்றச்சாட்டுக்களை தெரிவிக்கின்றன .இலங்கை பயங்கரவாதத்தை தோற்கடித்த ஒரு நாடாகும். அதற்கான சக்தி எம்மிடம் இருந்ததால் சில அமைப்புக்கள் இதனைப் பார்த்து பெரிதும் கவலை கொள்கின்றன. அவற்றில் மன்னிப்பு சபையும் ஒன்றாக இருக்கலாம்.
அந்த அமைப்பிடம் மேற்படி தாக்குதல் பட்டியல் இருந்தால் அதனை நிரூபிக்குமாறு நாம் சவால் விடுகிறோம்.
சர்வதேச மன்னிப்பு சபையிடம் அரசாங்கம் கடந்த காலத்தில் பேச்சவார்த்தை நடத்திய போதிலும் அது எம்முடன் பாரபட்சமாக நடந்து கொள்கிறது என்றார்.
இலங்கையிலுள்ள குறைந்தது 35 முன்னணி ஊடகவியலாளர்களினதும், தன்னார்வ நிறுவனங்களின் அதிகாரிகளினதும் பெயர்களை உள்ளடக்கி இலங்கை புலனாய்வுப் பிரிவினால் தயாரிக்கப்பட்டதாக நம்பப்படும் தாக்குதல் பட்டியல் ஒன்று தம்மிடம் உள்ளதாக மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது.
புலனாய்வு சேவையின் நோக்கில் இவர்களது முக்கியத்துவத்திற்கு ஏற்ப இவர்கள் தரப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று மன்னிப்பு சபை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பட்டியல் அரசாங்கத்தினால் கசிய விடப்பட்டமை, அவர்களை அச்சுறுத்துவதற்கும் துன்புறுத்துவதற்குமே என்றும் மன்னிப்புச் சபை அச்சம் தெரிவித்துள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக