இராணுவ சட்டத்துக்கு முரணான வகையிலும் உரிய ஆலோசனைகளுக்கு செவிமடுக்காமலும் பல்வேறு கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுக்களின் கீழ் ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்வதற்காக நிறுவப்பட்டுள்ள இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழு ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் முதலாவது அமர்வு நாளை 6ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளதுடன் அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளதாக இராணுவ தரப்பு தெரிவித்தது.
இராணுவத்தின் மேஜர் ஜெனரல் பதவி நிலை வகிக்கும் மிலிந்த பீரிஸ் இந்த நீதிபதிகள் குழுவுக்கு தலைமை வகிப்பதுடன் அவருடன் இணைந்து செயற்படுவதற்காக மேஜர் ஜெனரல்களான லலித் தவுளகல மற்றும் மஹிந்த ஹத்துறுசிங்க ஆகியோர் உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவினால் பரிந்துரை செய்யப்பட்ட மேற்படி நீதிபதிகள் குழுவுக்கான உறுப்பினர்கள் மூவருக்குமான நியமனங்கள் நேற்று முன்தினம் சனிக்கிழமை கூட்டுப் படைகளின் தளபதியான ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளன.
அதேவேளை ஜெனரல் பொன்சேகா, சேவையில் ஈடுபட்டிருந்த போது அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்ற மூன்று குற்றச்சாட்டுக்களின் கீழ் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்ட முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் இரண்டாவது அமர்வும் நாளை செவ்வாய்க்கிழமையே நடைபெறவிருக்கின்றது.
இந்நிலையில் முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்ததும் இரண்டாவது இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இராணுவ தரப்பு தெரிவித்தது.
இராணுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதியும் முப்படைகளின் முன்னாள் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகாவின் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நிறுவப்பட்ட இரண்டாவது இராணுவ நீதிமன்ற நடவடிக்கைகளின் முதலாவது அமர்வு கடந்த மார்ச் மாதம் 17ஆம் திகதி புதன் கிழமை இடம்பெற்றது.
இராணுவச் சட்டத்துக்கு முரணான வகையிலும் உரிய ஆலோசனைகளுக்கு செவிமடுக்காமலும் பல்வேறு கொள்வனவு நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என நான்கு குற்றச்சாட்டுக்கள் இராணுவ சட்டத்தின் 109(ஈ) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையிலேயே அவை தொடர்பில் அன்றைய தினம் விசாரணைகள் நடத்தப்படவிருந்தன.
இருப்பினும் முதலாவது இராணுவ நீதிமன்றத்தின் நீதிபதிகள் குழுவே இரண்டாவது நீதிமன்றத்திலும் விசாரிக்க முடியுமா என்பது தொடர்பில் எழுந்த பிரச்சினைகளை அடுத்து இரண்டாவது இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டதுடன் அது தொடர்பில் ஜனாதிபதிக்கு அறிக்கையிடுவதற்கும் நீதிபதிகள் குழுவினால் தீர்மானிக்கப்பட்டது.
இந்நிலையிலேயே இரண்டாவது இராணுவ நீதிமன்றத்துக்கான நீதிபதிகள் குழுவில் அங்கம் வகிப்போரின் பெயர்கள் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் ஜெகத் ஜயசூரியவினால் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில் ஜனாதிபதியினால் அவர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன.
அந்த வகையில் குறித்த நீதிபதிகள் குழுவுக்கு தலைமை வகிக்கும் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ், ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக் கழகத்தின் தளபதியாக சேவையாற்றி வருகின்றார்.
அதேவேளை, ஏனைய உறுப்பினர்களான மேஜர் ஜெனரல் லலித் தவுளகல, தென் பிராந்தியத்துக்கான கட்டளைத் தளபதியாகவும் மேஜர் ஜெனரல் மஹிந்த ஹத்துறுசிங்க, யாழ்.மாவட்டத்துக்கான கட்டளைத் தளபதியாகவும் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக