ஜனநாயகச் சூழலில் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஈ.பி.டி.பி.க்கு கிடைக்கப் பெறும் அதிகப் படியான வாக்குகளைத் தடுப்பதற்கு ஏனைய சில தமிழ்க் கட்சிகள் முயன்று வருகின்றன என ஈ.பி.டி.பி.யின் சர்வதேச பிராந்தியங்களின் முக்கியஸ்தர் விந்தன் தெரிவித்தார்.
யாழ் திவ்ய ஜீவன சங்க மண்டபத்தில் நேற்று (04) நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் யுத்தம் முடிவுக்கு வந்து ஜனநாயகச் சூழல் நிலவுகின்ற இக்காலப் பகுதியில் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பி.யினராகிய எமது வெற்றி மக்களால் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் தேர்தல் வெற்றிகளைத் தடுப்பதற்கு ஏனைய சில தமிழ் கட்சிகள் பலவாறான கைங்கரியங்களில் ஈடுபட்டு வருகின்றன. முக்கியமாக எமது கட்சி மீது அவதூறான பொய்ப் பிரச்சாரங்களை ஊடகங்கள் வாயிலாகவும் எமது சுவரொட்டிகளை கிழித்தும் அடாவடித் தனங்களைப் மேற்கொண்டு வருகின்றனர்.
எமது கட்சிக்கு எதிராக இவ்வாறு மேற்கொள்ளப்பட்டு வரும் செயல்களை ஈ.பி.டி.பி.யினராகிய நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
எமது செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் நடைமுறைக்குச் சாத்தியமான விடயங்களை முன்வைத்து தேர்தல் களத்தில் தனது வேட்பாளர்களுடன் நிற்கின்றார். அவரையும் அவரது தோழர்களையும் நீங்கள் பாராளுமன்றத்துக்கு பெரும்பான்மைப் பலத்துடன் அனுப்பி வைப்பதன் மூலம் உங்கள் வாழ்வும், வளமும் வானுயர உயர்த்தப்படும் என்றும் தெரிவித்தார்.
அங்கு கருத்துத் தெரிவித்த ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா அவர்கள், நாம் மக்களுக்கு புதியவர்களல்ல. நீண்டகாலமாக மக்கள் சேவையை நோக்காகக் கொண்டு அதற்காக நாள்தோறும் உழைத்து வருபவர்கள்.
மக்கள் சுதந்திரமாக சிந்திக்க, வாக்களிக்க, நடமாட, பேச என எல்லாவற்றுக்கும் இன்றைய ஜனநாயகச் சூழல் தோற்றுவி;க்கப்பட்டுள்ளது.
ஆனாலும் எம்மீது யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் நாளிதழ்களும் ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளும் மூட்டை மூட்டையாக பொய்ப் பிரசாரங்களை வெளியிடுவதில் முண்டியடித்து வருகின்றன.
எனவே மக்களாகிய நீங்கள் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டுமென்பதுடன் நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் சரியானவர்களுக்கு உங்களது வாக்குகளை வழங்குவதன் ஊடாகவே நிம்மதியான கௌரவமான, வளமான வாழ்வை வாழ முடியும் என்றும் அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் யாழ் மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜா உட்படப் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
|
0 கருத்துகள்:
கருத்துரையிடுக