அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 60 வயதிற்கு மேலான முதியோர்களுடன், ஜெர்மன் நாட்டு சுற்றுலா கப்பல் ஒன்று கடந்த மாதம் அமெரிக்காவில் உள்ள பகாமாவில் இருந்து உலகை சுற்றிவரப்புறப்பட்டது.
அல்பட்ரோஸ் என்ற பெயருடைய இந்த உல்லாச கப்பலில் 700 சுற்றுலா பயணிகள், 300 சிப்பந்திகள் என்று ஆயிரம் பேர் பயணிக்கின்றனர். 205 மீட்டர் நீளமும், 3,594 மெட்ரிக் டன் எடையும் கொண்ட இந்த பிரமாண்ட கப்பல் உலகில் பல்வேறு நாடுகளை சுற்றிவிட்டு கடந்த வாரம் கேரளா மாநிலம் கொச்சியை வந்தடைந்தது. பின்னர், அங்கிருந்து அந்தமான் வழியாக நேற்று காலை 9 மணிக்கு சென்னை துறைமுகம் வந்தடைந்தது.
கப்பலில் வந்த வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அனைவருக்கும், தமிழகத்தில் பாரம்பரிய இசையான நாதஸ்வர வாத்தியம், மேள தாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், சுற்றுலா பயணிகள் சிறு சிறு குழுக்களாக பிரிந்து வாடகை கார்களில் சென்னை நகரை சுற்றிப்பார்க்க புறப்பட்டனர். சிலர் கப்பலின் மேல் தளத்தில் நின்றபடி சென்னை நகரின் அழகை ரசித்தனர். அங்கு நின்றபடியே புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.
துறைமுகத்தில் இருந்து கார்களில் புறப்பட்ட வெளிநாட்டு பயணிகள் அனைவரும் சென்னை, மாமல்லபுரம், காஞ்சீபுரம், புதுச்சேரி உள்ளிட்ட சுற்றுலா ஸ்தலங்களை சுற்றி பார்க்க சென்றனர். இவர்கள் அனைவரும் இன்று (செவ்வாய்கிழமை) மாலைக்குள் சென்னை துறைமுகம் வந்தடைகின்றனர். அதனைத் தொடர்ந்து, மாலை 6 மணிக்கு இந்த உல்லாச கப்பல் இலங்கை தலைநகர் கொழும்பு நோக்கி பயணிக்கின்றது
0 கருத்துகள்:
கருத்துரையிடுக