திருகோணமலை கடற்கரையில் அமைந்துள்ள திறந்தவெளி அரங்கில் ஞாயிறன்று மாலை க. யோகரட்ணம் தலைமையில் நடந்த தமிழரசுக் கட்சியின் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
"தமிழ் மக்களும், முஸ்லிம் மக்களும் வடக்குகிழக்கில் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும். எமது ஒற்றுமையின் மூலமே பொது எதிரியை வெற்றிகொள்ள முடியும் என்பதை இரு சாராரும் உணர்ந்துள்ளோம். இது எமக்குக் கிடைத்த நல்லதொரு வாய்ப்பு. ஜனாதிபதித் தேர்தலில் இதை நாம் நிரூபித்துள்ளோம்; தொடர்ந்தும் நிரூபிப்போம்.
ஜனாதிபதித் தேர்தலில் சேருவில, அம்பாறை, ஊர்காவற்றுறை ஆகிய மூன்று இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களில் நாங்கள் ஒருமித்த கருத்தோடு வாக்களித்து எமது எதிர்ப்பை ஜனாதிபதிக்கு எதிராக இரு இனத்தவரும் காட்டியுள்ளோம். இது வரலாற்றில் எமக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.
எதிர்வரும் ஏப்ரல் எட்டாம் திகதி நடைபெறுகின்ற தேர்தலிலும் இரு இனமும் இதை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். சர்வதேசம் இந்த தேர்தலை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. முடிவை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் மகத்தான வெற்றியை மக்கள் எங்களுக்குத் தரவேண்டும். அப்பொழுதுதான் எங்கள் நியாயத்தை சர்வதேசம் உணர்ந்துகொள்ளும்.
தேர்தல் முடிந்த பின்பு தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் தீர்வைக் கொண்டு வருவேன் என்று ஜனாதிபதி கூறுகிறார். அவர் இந்தத் தேர்தல் முடிவின் பின் எங்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் நாங்கள் போகத் தயாராகவுள்ளோம். ஆனால், எங்களது அடிப்படைக் கோட்பாடுகளை விட்டுக்கொடுத்து பேச்சுவார்த்தைக்கு எந்தக் காலத்திலும் நாங்கள் போகத் தயாராக இல்லை.
நாங்கள் ஆயுதப் போராட்டத்தை விரும்பவில்லை. ஆனால், தமிழர்களாகிய நாம் தன்மானத்துடனும், கௌரவத்துடனும் வாழ விரும்புகின்றோம். இறைமை மக்களுக்கு உரியது. அந்த இறைமையின் அடிப்படையில் தான் சுயநிர்ணய உரிமை நிர்ணயிக்கப்பட்டு, சகல இனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்.
தேசப் பாதுகாப்பு, கல்வி, காணி, விவசாயம், வேலைவாய்ப்பு போன்றவற்றை ஆட்சியைப் பயன்படுத்தி நிறைவேற்றும் தத்துவம் எமக்கு இருக்க வேண்டும் என்று விரும்புகின்றோம். எமது சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க வேண்டும். அதற்காகவே இந்த தேர்தலையும் முடிவையும் முக்கியமானது என எதிர்பார்க்கின்றோம்.
தேர்தலில் பின் தமிழ் மக்களுக்கு இந்த அரசு நியாயமான தீர்வை வழங்கவேண்டும். வழங்குவதற்கு சர்வதேசம் உதவவேண்டும். தொடர்ந்தும் நாம் ஏமாற்றப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. இதை உணர்ந்து, இந்தத் தேர்தலில் எல்லா மக்களும் ஆர்வத்துடன் கலந்து கொண்டு எமக்கு மகத்தான வெற்றியை ஈட்டித்தருவதுடன் சர்வதேசத்தையும் இந்த அரசாங்கத்தையும் திரும்பிப் பார்க்க வைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றோம்.
திருமலையில் இருவர் வெற்றிபெற வேண்டும். எமது சவால்களை நாம் முறியடிக்க வேண்டும். இந்தத் தேர்தலில் வாக்களிப்பது மக்களாகிய உங்களது புனித கடமை என்பதை உணர்ந்துகொள்ள வேண்டும்" என்றார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக