இலங்கையின் ஆறாவது பாராளுமன்றத்தின் இறுதி தினத்தில் அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பது தொடர்பான பிரேரணை சமர்ப்பிக்கும் இறுதி சந்தர்ப்பம் இதுவாகும். அவசரகாலச் சட்டத்தை நீடிப்பதற்காக கோரும் இறுதிச் சந்தர்ப்பமாக இருப்பதை காண்பதே எமது எதிர்பார்ப்புமாகும். கடந்த காலங்களில் இந்த எதிர்பார்ப்பு எமக்கு இருந்து வந்தது. எனினும் நாட்டில் ஏற்பட்ட நிலைமை காரணமாக அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டியிருந்தது. இதனாலேயே தொடர்ந்தும் இந்த கோரிக்கையை முன்வைக்க நேர்ந்தது எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதற்காக நேற்று பாராளுமன்றம் மீண்டும் கூட்டப்பட்டது. பிரதமர் ரத்னசிறி விக்கிரமநாயக்க பிரேரணையை சமர்ப்பித்துப் பேசினார்.
எனினும் சிலர் குற்றம் சாட்டுவது போன்று நாம் அவசரகாலச் சட்டத்தை துஷ்பிரயோகம் செய்ததில்லை. எமக்கு அவ்வாறானதொரு தேவை இருக்கவில்லை. பிறந்த நாட்டுக்கும் மக்களுக்கும் நன்மையை பெற்றுக் கொடுப்பது எவ்வாறு என்பது பற்றித்தான் சிந்தித்தோம். பயங்கரவாதத்தை தோற்கடித்ததும் அதனூடாக நாட்டுக்கு கீர்த்தி கிடைத்ததும் இதனால்தான். சிலர் அதனை இன்று மறந்துவிட்டனர். அதனால்தான் இவ்வாறான குற்றச்சாட்டுக்களை சுமத்துகிறார்கள். வெள்ளைமுள்ளிவாய்க்கால் பகுதியில் இன்னமும் ஆயுதங்கள் கைப்பற்றப்படுகின்றன. வெடிகுண்டுகள் கைப்பற்றப்படுகிள்றன என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இவ்வாறான ஆயுதங்கள் சிலரது கைகளில் கிடைக்க வழிவகைகள் செய்யப்படக்கூடாது. இந்தப் பகுதிகளிலுள்ள மக்களின் மனதிலுள்ள அச்சத்தை போக்கவேண்டும். இதனை செய்து முடிப்பதற்காகவே அவசரகாலச் சட்டத்தை நீடிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கிறோம். பயங்கரவாதத்தை ஒழிப்பது மட்டுமின்றி அதற்கு ஆதரவு வழங்குபவர்கள் தொடர்பாகவும் கூடிய கவனம் செலுத்தப்பட வேண்டும்.
புலிகளுக்கு துணை போகின்ற சிலர் புலிகளின் தலைவர் மீண்டும் வரப்போகிறார் என தெரிவித்துள்ளனர். இவர்கள் இதனை எவ்வாறு செய்ய முயல்கிறார்களோ தெரியவில்லை. எனினும் பயங்கரவாதத்தை கல்லறையிலிருந்து மீண்டும் உயிர்த்தெழுவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என்றும் மேலும் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக