இதுதொடர்பாக நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில் விவாகரத்து ஆவணங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து ஷோயப்-சானியா திருமணத்தில் ஏற்பட்டிருந்த சிக்கல் தீர்ந்துள்ளது.
இதுதொடர்பாக ஆயிஷா சித்திக்கின் குடும்ப நண்பர் ஷாம்ஸ் பாபர் நிருபர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
ஷோயப்-ஆயிஷா விவகாரத்தில் சமாதானம் ஏற்பட்டுள்ளது உண்மைதான். புதன்கிழமை காலை நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில் விவாகரத்து ஆவணங்களில் இருவரும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து விவாகரத்தும் முடிந்துவிட்டது.
ஷோயப் மீது கொடுக்கப்பட்டிருந்த புகார்கள் அனைத்தும் வாபஸ் பெறப்படும் என்றார் அவர்.
ஷோயப், ஆயிஷா குடும்பத்தாருக்கு நெருங்கியவரான முஸ்தபா கான் கூறியதாவது: ஷோயப்-ஆயிஷா விவகாரத்தில் ஏற்பட்டிருந்த சிக்கலைத் தீர்க்க முஸ்லிம் சமுதாயத் தலைவர்கள் செவ்வாய்க்கிழமை இரவு முதல் புதன்கிழமை காலை வரை பேச்சுவார்த்தை நடத்தி இந்தப் பிரச்னைக்கு சுமுகத் தீர்வு காணப்பட்டது என்றார் அவர்.
பின்னர் ஆயிஷா வீட்டில் ஆந்திர மாநில காங்கிரஸ் பொதுச் செயலரும், ஆயிஷா, ஷோயப் குடும்பத்தாருக்கு நெருங்கியவருமான அபித் ரசூல் கான், காத்ரி, நிருபர்களிடம் கூறியதாவது:
முஸ்லிம் தலைவர்கள் நடத்திய சமாதானப் பேச்சுவார்த்தையின் முடிவில் விவாகரத்து முடிந்துவிட்டது. இஸ்லாம் சட்டப்படி விவாகரத்துக்காக மாதம் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் 3 மாதங்களுக்கு மொத்தம் ரூ.15 ஆயிரத்தை ஆயிஷாவுக்கு, ஷோயப் வழங்கவேண்டும்.
விவாகரத்து முடிந்துள்ளதால் இனி ஷோயப்-சானியா திருமணத்தில் பிரச்னை இல்லை. சம்பந்தப்பட்ட ஷோயப், ஆயிஷா, சானியா ஆகிய 3 பேரின் குடும்பத்தாரையும் அழைத்து பேசி விவாகரத்தை முடிவு செய்தோம். இதில் எந்த நிபந்தனையும் விதிக்கப்படவில்லை.
மேலும் பணமும் இதில் சம்பந்தப்படவில்லை. எங்கள் மதத்தில் என்ன கூறப்பட்டிருக்கிறதோ அந்த விதிகளின்படிதான் நடந்தோம். முஸ்லிம் காஜி முன்னிலையில் புதன்கிழமை காலை 7 மணி முதல் 8 மணி வரை விவாகரத்து சம்பிரதாயங்கள் நடந்தன என்றார் அவர்.
அப்போது ஆயிஷாவின் தாய் ஃபரீஸôவும், சானியா மிர்சாவின் மாமா முகமது ஷபியும், சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட சமூக சேவகர் மேஜர் ஜி.எம். காத்ரியும் உடன் இருந்தனர்.
ஆயிஷாவின் தாய்:ஃபரீஸô கூறியதாவது: முஸ்லிம் பெரியவர்கள் தலையிட்டு பிரச்னையை சுமுகமாக முடித்து வைத்துள்ளனர்.
இரு குடும்பங்களுக்கு உள்ள பிரச்னையால் முஸ்லிம் சமூகத்துக்கு கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக்கூடாது என்ற நிலையில் விவாகரத்துக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டது. இதில் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.
எனது மகள் ஆயிஷா பல்வேறு கஷ்டமான சூழ்நிலைகளைக் கடந்து வந்துள்ளாள். தற்போது அவள் மகிழ்ச்சியாக இருப்பாள். இறுதியில் எனக்கு மகளுக்கு நீதி கிடைத்துவிட்டது. ஷோயப்-சானியா மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ ஆயிஷா வாழ்த்துகளைத் தெரிவித்தாள். ஆயிஷா விவகாரம் முடிந்து போன அத்தியாயம். இந்த விவாகரத்தைத்தான் நாங்கள் விரும்பினோம். அது நடந்துவிட்டது என்றார் அவர்.
ஷோயப் பேட்டி: நான் யாரையும் திருமணம் செய்துகொள்ளவில்லை. போன் மூலம் நடைபெற்ற திருமணத்தால்தான் இந்த பிரச்னை. இது எங்களது மதம் சம்பந்தப்பட்ட பிரச்னை என்று முஸ்லிம் பெரியவர்கள் தெரிவித்தனர்.
இந்த விவகாரத்தில் எல்லாமே தவறான திசையில் சென்றுகொண்டிருந்தன. எனவே விவாகரத்துக்கு நான் ஒப்புக்கொண்டேன்.
திருமணமே செய்யாதபோது ஏன் விவாகரத்து செய்தீர்கள் என்று கேட்கிறீர்கள். இந்த விவகாரத்தில் உள்ள சிக்கலான விஷயங்களுக்குச் செல்ல நான் விரும்பவில்லை என்றார் அவர்.
விவாகரத்து முடிந்துள்ளதால் இனி ஷோயப்-சானியா திருமணம் பிரச்னை இல்லாமல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
திருமணத்துக்கான ஏற்பாடுகள் ஹைதராபாதிலுள்ள தாஜ் ஹோட்டலில் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக