ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இன்று முற்பகல் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை அலரி மாளிகையில் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடல் இடம்பெற்றபோதும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சிகளின் ஜனாதிபதி பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலை குறித்து முக்கியமாக இதன்போது கலந்துரையாடப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த ஜனாதிபதி நாட்டின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக தனக்கு நியாயம் கிடைக்கும் முகமாக சரத் பொன்சேகா உச்ச நீதிமன்றத்தை நாடலாம் எனவும் அது தொடர்பான சட்ட உதவிகளை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
தற்சமயம் சரத் பொன்சேகாவின் பாரியாரான அனோமா பொன்சேகாவே சரத் பொன்சேகாவிற்கான உணவினை எடுத்துச் செல்லுவதாகவும் வேறு ஒருவரை உணவு எடுத்துச் செல்ல அனுமதி வழங்கும்படியும் இச்சமயம் ரணில் விக்கிரமசிங்க கோரிக்கை விடுத்தார். இதற்குப் பதிலளித்த ஜனாதிபதி இவ்விடயம் தொடர்பாக ராணுவத்தளபதியே முடிவு எடுக்க வேண்டும் எனத் தெரிவித்ததுடன் மூன்றாம் நபர் ஒருவர் உணவு கொண்டு செல்லுவதிலும் பார்க்க அவரது மனைவியே உணவினை எடுத்துச் செல்லுவது சிறந்ததாக தான் கருதுவதாக தெரிவித்தார். மேலும் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது மக்கள் போராட்டத்திற்காக தான் சிறையிலடைக்கப்பட்டபோது அச்சமயம் கர்ப்பிணியாக இருந்த தனது மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ தினமும் இருவேளைகள் தனக்கான உணவினை சிறைக்கு எடுத்துவந்ததையும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். மேலும் எவ்வித முறைகேடுகளும் இன்றி நாட்டின் சட்டதிட்டத்திற்கு ஏற்ப சரத் பொன்சேகா மீதான குற்றச்சாட்டுக்கள் நீதியாக விசாரிக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக