தனது கணவரான முன்னாள் இராணுவ தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா சட்டத்திற்கு முரணான வகையில் கைது செய்யப்பட்டுள்ளார் எனக்கூறி அனோமா பொன்சேகா உயர்நீதிமன்றில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை நேற்று தாக்கல் செய்தார்.
இந்த மனு ஜனாதிபதி சட்டத்தரணி விஜேதாச ராஜபக்ஷ ஊடாகவே தாக்கல் செய்யப்பட்டதாக தெரிவித்த அனோமா பொன்சேகா, அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
"எனது கணவரான ஜெனரல் சரத் பொன்சேகா மிகவும் மோசமான முறையில் சட்ட விரோதமாகவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதுக்கு எதிராக இன்று (நேற்று) உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளேன்.
தற்போது ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஏற்பட்டுள்ள அநீதி தொடர்பாக எம்மால் ஒன்றும் செய்ய முடியாமல் உள்ளபோதிலும் சட்டத்தின் மீது ஓரளவேனும் நம்பிக்கை வைக்க முடியும். இன்றும் பெரும் நம்பிக்கையுடன் உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல் செய்துள்ளேன். நிச்சயம் நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு.
ஜெனரல் சரத் பொன்சேகாவை நேற்று (நேற்றைய முன் தினம்) எனக்கு பார்ப்பதற்கு அனுமதி கிடைத்தது. அவர் தற்போது கடற்படையினரின் வதிவிடமொன்றில் வைக்கப்பட்டுள்ளார். இங்குள்ள வசதிகள் தொடர்பாக என்னால் ஒன்றும் கூற முடியாது. நான் சென்று பார்வையிடும் வரை ஜெனரல் சரத் பொன்சேகா எவ்விதமான உணவையோ, தண்ணீரையோ உட்கொண்டிருக்கவில்லை.
எனக்கு அவரை பார்ப்பதற்கு ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலமே வழங்கப்பட்டுள்ளது. அதனை இரண்டாக பிரித்து காலையும் மாலையும் அரை மணித்தியாலங்கள் படி ஜெனரல் சரத் பொன்சேகாவை பார்த்துவிட்டு வருகின்றேன்.
தனது போராட்டத்தையும் தனக்கு ஆதரவளித்த பொதுமக்களையும் எந்தவிதமா சூழ்நிலை வந்தாலும் கைவிடப் போவதில்லை என அவர் உறுதியாக எனக்கு கூறினார்."எனத் தெரிவித்தார்.
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக