யுத்தத்தின் இறுதிக் கட்டங்களின்போது இடம்பெயர்ந்த பொதுமக்களின் நிலைமை உட்பட இலங்கையின் மனிதாபிமான நிலைவரத்தை உன்னிப்பாக அவதானித்து வருவதாக அவுஸ்திரேலிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வட பகுதியில் மீளக்குடியமர்த்தப்படும் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான மானியமாக 20 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை வழங்குவதாக அவுஸ்திரேலியா இந்த வாரம் அறிவித்திருக்கிறது. இந்த நிதியுதவியானது உலகவங்கி மற்று ஆசிய அபிவிருத்தி வங்கி செயல்திட்டங்கள் ஊடாக வழங்கப்படும்.
வடக்கில் மீள்குடியேற்ற, மீள்கட்டுமான நடவடிக்கைகளுக்கு இலங்கை அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பதற்காக இந்த நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என்று கொழும்பிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயம் நேற்று விடுத்துள்ள பத்திரிகைச் செய்தி தெரிவித்துள்ளது.
இந்தப் புதிய நிதியுதவி தொடர்பான அறிவிப்பை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் கடந்த புதன்கிழமை அவுஸ்திரேலியப் பாராளுமன்றத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஸ்டீபன் ஸ்மித், இலங்கையின் மனிதாபிமான நிலைவரத்தை நெருக்கமாக அவதானித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் உள்ள இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியமர்த்துவதும் அவர்களை ஸ்திரமான நிலைமைக்குக் கொண்டு செல்வதும் மிகவும் முக்கியமான விடயமென ஸ்டீபன் ஸ்மித் குறிப்பிட்டதுடன், இறுதியான சமாதானத்தை எட்டுவதற்கான அத்திபாரமிடுவதாகவும், மனிதாபிமான காரணங்களுக்காகவும் இந்த நிகழ்ச்சித் திட்டங்கள் அத்தியாவசியமாகவிருப்பதாக அவர் தெரிவித்திருக்கிறார்.
வட பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பான முறையில் மீளக்குடியமர்த்துவதை உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு ஆதரவாக கண்ணிவெடி அகற்றும் பணிகளுக்கு சுமார் 200 கோடி ரூபாவை அவுஸ்திரேலியா வழங்குவதென உறுதியளித்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். அத்துடன், வட பகுதியில் வீடுகளைத் திருத்துதல், மீளக்கட்டுதல் போன்ற செயற்திட்டங்களுக்கு அவுஸ்திரேலியா உதவி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், சகல இலங்கையர்களின் நன்மைக்காகவும் நீடித்த அரசியல் இணக்கப்பாட்டுக்கு வருவதற்கான நடவடிக்கைகள் தேவையாக இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். அரசியல் மறுசீரமைப்பு மற்றும் சகல கட்சிகள், சமூகங்களுக்கிடையிலான இணக்கப்பாடு போன்ற நடவடிக்கைகளின் பின்னரேயே அரசியல் இணக்கப்பாடு ஏற்பட முடியுமென்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்குள்ளிருந்தே தீர்வொன்று எட்டப்பட வேண்டுமெனவும் ஸ்ரீபன் ஸ்மித் தெரிவித்திருக்கிறார். சகல இலங்கையர்களையும் நிர்வகிப்பது தொடர்பான ஜனாதிபதி ராஜபக்ஷவின் உறுதிமொழியை ஸ்டீபன் ஸ்மித் வரவேற்றிருக்கிறார்.
ஏற்கனவே எட்டப்பட்டிருக்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவது தொடர்பான விடயம் மற்றும் நல்லிணக்கத் திட்டத்தை முன்னோக்கிக் கொண்டு செல்லுதல் போன்றவை தொடர்பாக ஜனாதிபதி அளித்திருக்கும் உறுதிமொழியை அவர் வரவேற்றிருக்கிறார்.
இதேவேளை, இறுதியான அரசியல் நல்லிணக்கத்தை வென்றெடுக்க இதய சுத்தியுடன் கூடிய நடவடிக்கைகளை இலங்கையிலுள்ள சகல அரசியல் குரல்களும் ஓங்கி ஒலிக்க வேண்டுமென அவர் உற்சாகமூட்டியுள்ளார். வலுவான சிவில் சமூகமும் சுதந்திரமான ஊடகமும் இந்த நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் எனவும் ஸ்டீபன் ஸ்மித் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையுடனும் இலங்கைக்குள்ள சமூகக் குழுக்களுடனும் சகலருக்கும் சமாதானமானதும் சுபிட்சம் நிறைந்ததுமான எதிர்காலத்தைக் கட்டியெழுப்ப அவுஸ்திரேலியா தொடர்ந்து இணைந்து செயற்படுமென அவர் குறிப்பிட்டுள்ளார்
தரமான நூல்கள் புத்தகங்கள் மற்றும் திரை விமர்சனங்கள்
5 ஆண்டுகள் முன்பு
0 கருத்துகள்:
கருத்துரையிடுக