சரத் பொன்சேகா |
சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான முதலாவது இராணுவ நீதிமன்ற விசாரணை
இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா அவர்களுக்கு எதிரான இராணுவ நீதிமன்ற விசாரணை ஒன்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது.
இந்த விசாரணைகளின் போது, அவர் இராணுவ பதவியில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.
இந்த விசாரணைகளின் போது, அவர் இராணுவ பதவியில் இருந்தபோதே அரசியலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டன.
இந்த இராணுவ நீதிமன்ற விசாரணைகளை சரத் பொன்சேகா அவர்கள் புறக்கணிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்ட போதிலும், இன்றைய விசாரணைகளில் அவர் தனது சட்டத்தரணிகளுடன் கலந்து கொண்டிருக்கிறார்.
அதேவேளை அவர் மீதான வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பான மற்றுமொரு விசாரணை புதன்கிழமை ஆரம்பமாகின்றது. அந்த விசாரணையின் போது இராணுவ தளபாடங்களின் கொள்வனவு குறித்த விதிகளை அவர் மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரணை நடத்தப்படும்.
இன்றைய இராணுவ நீதிமன்ற விசாரணைகள் கடற்படைத்தலைமையகத்தில் ஆரம்பமானதாக இலங்கை இராணுவத்தின் சார்பில் பேசவல்ல மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க அவர்கள் கூறினார்.
இன்றைய இராணுவ விசாரணை மன்றத்தின் மூன்று நீதிபதிகள் குறித்து சரத் பொன்சேகா அவர்களின் சார்பில் ஆஜரான 8 சட்டத்தரணிகள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்கள்.
அவர்களில் ஒருவர் தற்போதைய இராணுவ தளபதியின் நெருங்கிய உறவினர் என்பதும் ஏனையவர்கள் சரத் பொன்சேகா மீது குரோதம் வைத்திருப்பதற்கான காரணங்கள் இருக்கின்றன என்பதும் அவர்களது வாதம்.
ஆனால், அந்த ஆட்சேபணைகள் நிராகரிக்கப்பட்டதுடன், விசாரணைகளைத் தொடர்வது என்றும் முடிவு செய்யப்பட்டது.
தனது கணவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வேடிக்கையானவை என்கிறார் அனோமா பொன்சேகா |
அவருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க இராணுவ நீதிமன்றத்துக்கு அதிகாரம் கிடையாது என்று அவர்கள் வாதாடினார்கள்.
அதனை அடுத்து அவர்கள் தமது தரப்பு வாதங்களை மேலும் முன்வைப்பதற்காக ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதிக்கு விசாரணைகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இவை குறித்த மேலதிக தகவல்களை இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் விஞ்ஞாபனம்
ரவூப் ஹக்கீம் |
இந்த தேர்தல் அறிக்கையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை சீர்திருத்துவது, நாடாளுமன்றத்தின் ஆயுட்காலத்தை ஐந்து ஆண்டுகளாகக் குறைப்பது போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
ஆனால், கடந்த இரண்டரை தசாப்தங்களாக நாட்டில் நடந்த போர் முடிவுக்கு வந்த நிலையில், அந்தப் போருக்குகாரணமாக இருந்த இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து, இந்த அறிக்கையில் பெரிதாக எதுவும் சொல்லப்படவில்லை.
இதற்கு காரணம் என்ன என்று, அந்தக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசின் தலைவர் ரவுப் ஹக்கீம் தமிழோசை தொடர்பு கொண்டு கேட்டபோது, இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பது என்பது நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைக்கும் நிலையிலேயே சாத்தியமான விஷயம் எனவே அது குறித்து பெரிதாக இந்த அறிக்கையில் பிரஸ்தாபிக்கப்படவில்லை என்றார்.
மேலும் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு குறித்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பும் ஐக்கிய தேசியக் கட்சியும் பரிமாறிக்கொண்ட கருத்துக்களின் அடிப்படையில் சில உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன என்றார் ஹக்கீம்.
எனவே உறுதிமொழிகள் தான் வழங்கப்பட்டிருக்கின்றன உடன்பாடு ஏதும் எட்டப்படவில்லை என்று கூறலாமா என்று கேட்டதற்கு பதிலளித்த ஹக்கீம், இது உடன்பாடு செய்து கொள்வதால் மட்டுமே பெறக்கூடிய விஷயம் அல்ல, இதை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவைப்படும், இப்போதைய விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அமைப்பில் அது போன்ற ஒரு பெரும்பான்மை கிடைக்காது என்பதால் அதைக் குறிப்பிடவில்லை என்றார்.
ஆனால், மூன்றில் இரு பங்கு பெரும்பான்மை தேவைப்படும் பிற பிரச்சினைகளான, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை சீர்திருத்துவது, நாடாளுமன்றத்தின் ஆயுள்காலத்தை ஐந்தாண்டுகளாகக் குறைப்பது போன்றவை, இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு என்பது மட்டும் பெரிதாக குறிப்பிடப்படாமல், அடக்கி வாசிக்கப்பட்டிருப்பது, இத்தேர்தல் அறிக்கை, தெற்கில் இருக்கும் அரசியல் சூழ்நிலைகளை மட்டும் கணக்கில் எடுத்துக்கொண்டு உருவாக்கப்பட்டிருக்கிறதோ என்ற சந்தேகத்தை பலருக்கு ஏற்படுத்தலாம் அல்லவா என்று கேட்டபோது, இலங்கை இனப்பிரச்சினையில், நாட்டில் மாறுபட்ட கருத்துக்களும், துருவமயப்படுத்தப்பட்ட சமூகமும் இருக்கும் நிலையில், வெறும் உடன்பாடு அல்லது அறிக்கையில் குறிப்பிடுவது போன்றவை மட்டும் பலன் தராது அரசியல் ரீதியான கருத்திணக்கம் வேண்டும் என்பதால்தான் இது குறித்து குறிப்பிடப்படவில்லை என்றார் ரவுப் ஹக்கீம்.
இலங்கை அதிகாரிகள்- ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் சந்திப்பு
இலங்கைக்கான ஜிஎஸ்பி பிளஸ் ஏற்றுமதி வரிச்சலுகையை 6 மாதங்களில் தற்காலிகமாக நிறுத்துவது என்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் முடிவு குறித்து இலங்கை அதிகாரிகள் ஐரோப்பிய ஒன்றிய வர்த்தக ஆணையர் கார்ள் டி கூப்தர் அவர்களை சந்தித்துப் பேசியுள்ளார்கள்.
இலங்கை வெளியுறவு அமைச்சின் செயலர் தலைமையிலான அதிகாரிகள் குழுவே இந்தச் சந்திப்பில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து தமிழோசைக்கு தகவல் தந்த ஆணையத்தின் பேச்சாளரான ஜோண் கிளன்ஸி அவர்கள், இலங்கையில் மனித உரிமைகள் நிலவரங்களை மேம்படுத்துவது குறித்து இலங்கை தரப்பினர் தம்முடன் கலந்துரையாடுவதை ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாக கூறினார்.
இது குறித்த அவரது செவ்வியை நேயர்கள் இன்றைய நிகழ்ச்சியில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக