இலங்கையில் தேர்தல் சட்டவிதி மீறல்கள் மற்றும் வன்முறைகள் இடம்பெற்றுள்ள தினங்களில் இந்த வார இறுதி நாட்களே மிக மோசமானவையாக பதிவாகியுள்ளதாக கஃபே என்ற சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தலுக்கான இயக்கம் தமிழோசையிடம் தெரிவித்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு கட்சிகளுக்கிடையிலான வன்முறைகளும் உட்கட்சி மோதல்களும் அதிகரித்துள்ளன.அம்பாறை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வேட்பாளர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அம்பாறை நகரசபையின் பிரதி மேயரும் இன்னும் சிலரும் காயமடைந்துள்ளனர்.
ஃபேரியல் அஷ்ரப் மற்றும் சரத் வீரசேகர ஆகிய ஒரே கட்சி பிரமுகர்களின் ஆதரவாளர்களுக்கு இடையில் இந்த மோதல் இடம்பெற்றுள்ளது.
இதேவேளை குருநாகலையிலும் ஆளும் சுதந்திர முன்னணியின் இரு தரப்பு ஆதரவாளர்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதல்களில் குருநாகல் பிரதேச சபை தலைவர் காயமடைந்துள்ளார்.
நாடு முழுவதும் பல இடங்களில் தேர்தல் வன்முறைகளும் தேர்தல் சட்டவிதி மீறல்களும் பதிவாகியுள்ளதாக கஃபே அமைப்பின் இயக்குநர் கீர்த்தி தென்னக்கோன் சுட்டிக்காட்டினார்.
இயல்பு வாழ்வைப் பாதிக்கும் ஆடம்பர பிரச்சாரங்கள்
யாழ்ப்பாணத்தில் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்கள் நடைபெற்றுவருகின்ற போதிலும், மன்னார் பிரதேசத்தில் தொடர்ச்சியாக வன்முறைகள் பதிவாகியுள்ளதாகவும் தமிழ்க்கட்சிகளுக்கு கிளிநொச்சி போன்ற மீளக்குடியேற்றப் பகுதிகளுக்கு சென்று பிரசாரப் பணிகளில் ஈடுபடுவதில் இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
பாராளுமன்ற தேர்தல்கள் சட்ட வதிகளின் 74ம் பிரிவின்படி, ஹெலிகொப்டர்களைப் பயன்படுத்துவது உள்ளிட்ட ஆடம்பரமான நடைமுறைகள் சட்ட விதி மீறல்களாக உள்ளன |
சட்டவிரோதமான ஒலிபெருக்கி பாவனை மற்றும் ஹெலிகொப்டர், குதிரைகள் உள்ளிட்ட தேர்தல் சட்டங்களை மீறும் ஆடம்பரமான பிரசாரப் பணிகளும் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார்.
இலங்கை பாராளுமன்ற தேர்தல் சட்ட வதிகளின் படி மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு தடங்கல் ஏற்படுத்தும் அனைத்து வகையான பிரசார நடவடிக்கைகளும் சட்டமீறல்களாகும் என கஃபே அமைப்பின் இயக்குனர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக