கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி. தினகரனை, விடுமுறையில் செல்லுமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு அறிவுறுத்தியுள்ளது.
அரசு நிலத்தை ஆக்கிரமித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருக்கும் நீதிபதி தினகரன் நீண்ட விடுமுறையில் செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
அவருக்குப் பதிலாக, டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் நீதிபதி மதன் லோகூரை கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான உச்சநீதிமன்ற நீதிபதிகள் குழு இந்த முடிவை எடுத்துள்ளது.
நீதிபதி தினகரன் மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பாக விசாரிக்க நீதிபதி வி.எஸ். சிர்புர்கர் தலைமையில் மூவர் உறுப்பினர் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அந்தக் குழு தனது விசாரணையை நிறைவு செய்ய குறைந்தபட்சம் ஓராண்டு காலம் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதுவரை, தலைமை நீதிபதி இல்லாமல் உயர்நீதிமன்றம் இயங்க முடியாது என்ற நிலை ஏற்பட்டது.
நில ஆக்கிரமிப்பு மற்றும் அதிகாரத்தை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், தினகரனை பதவி நீக்கம் செய்யக் கோரி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் தாக்கல் செய்த தீர்மானத்தை மாநிலங்களவைத் தலைவர் ஹமித் அன்சாரி விவாதத்துக்கு ஏற்றுக்கொண்டார்.
நீதிபதி தினகரன் முன்னரே தாமாக விடுமுறையில் சென்றிருக்க வேண்டும் |
அதையடுத்து, கடந்த டிசம்பர் மாதத்திலிருந்து நீதிபதி தினகரன் தலைமை நீதிபதி பணிகளை மேற்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், நீதிபதி தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு செய்ய பரிந்துரை செய்யப்பட்ட நேரத்தில், அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் வெளிவந்தன.
தமிழ்நாட்டில் காவேரிராஜபுரத்தில் அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதாக சென்னையைச் சேர்ந்த ஓர் அமைப்பு குற்றச்சாட்டுக்களை வெளியிட்டது.
திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அந்தக் குற்றச்சாட்டுக்களை உறுதி செய்ததை அடுத்து, தினகரனை உச்சநீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு அளிக்கும் செயற்பாடுகள் கைவிடப்பட்டன.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக